CINEMA
Thalapathy68 : ரஜினியை மீண்டும் சீண்டுகிறாரா விஜய்..? தொடருமா காக்க, கழுகு கதை..?
ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக 45 ஆண்டுகளாக வலம் வந்துக்கொண்டு இருக்கிறார். 73 வயதிலும் இப்போதும் ஹீரோவாக நடித்துக்கொண்டு இருக்கிறார். அவரது ஜெயிலர் படம் 500 கோடி ரூபாய் என்ற சாதனை வசூலை செய்தது. இந்தியாவின் எந்த மாநிலத்தில் என்ன பதவிக்கு அவருக்கு வேண்டும் என்றாலும், அவருக்கு செய்த தர அரசியல் கட்சியினர் தயாராக இருக்கின்றனர். பல ஆண்டுகளாக ரஜினி நேரடியாக அரசியலுக்கு வரவேண்டும், அல்லது எங்களது கட்சிக்கு அவர் தேர்தல் நேரத்தில் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என பல அரசியல் கட்சிகள் அவரிடம் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால், மக்கள் செல்வாக்கு மிக்க ஒரு இந்திய ஆளுமையாக இருக்கும் ரஜினிகாந்த் இப்போதும் அமைதியாக இருக்கிறார். ஒரு சினிமா கலைஞனாக தன் பயணத்தை தொடர்கிறார்.
இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகர் மகன் என்ற ஒரே ஒரு அடையாளத்துடன் வந்த விஜய்க்கு துவக்கத்தில் பெரிய வெற்றிகள் இல்லை. என்றாலும் சில இயக்குநர்கள் அவரை கைதூக்கி விட்டு, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உருவாக்கினர். குறிப்பாக பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, கில்லி, போக்கிரி போன்ற படங்களால் முன்னுக்கு வந்த விஜய், இன்று 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நடிகராக உயர்ந்த இடத்தில் இருக்கிறார்.
தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் அவர் நடித்துவரும் படத்துக்கு கோட் ( கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம்) என பெயரிடப்பட்டுள்ளது. இது ரஜினியை சீண்டுவதாக இருப்பதாக தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்தை கிளப்பி, ரஜினிக்கு எதிராக விஜய் ரசிகர்கள் அலப்பரை செய்த நிலையில், இ்ந்த டைட்டில் அடுத்த மோதலுக்கு ரசிகர்களை தயார்படுத்துவதாகவே உள்ளது.
அதாவது கோட் என்ற தலைப்பின் மூலம் ரஜினியை ஆடு போலவும், விஜயை எப்பவும் சிறந்த மனிதராகவும் இது சித்தரிப்பதாக உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது ரோபோ படத்தில், ரஜினி வசீகரன் கேரக்டரை பார்த்து கருப்பு ஆடு என சிரிப்பது போல, இந்த படத்தில் சில காட்சிகளில் நான்தான்டா நிஜ கோட் என விஜய் பேசுவது போன்ற காட்சிகள் எல்லாம் இருப்பதாக கூறப்படுகிறது. ரஜினியை விட உண்மையில் எப்போதும் நான்தான் சிறந்தவன் என்ற அர்த்தத்தில் தான் இப்படி ஒரு பெயரை வைக்க விஜய் முயற்சித்திருப்பதாக ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.
துவக்கத்தில் ரஜினி போஸ்டரை காட்டி, அவரது டயலாக் பேசி, அவர் ரசிகன், தலைவர் என்றெல்லாம் பம்மாத்து காட்டிய விஜய், இன்று பெரிய நடிகராக வளர்ந்த பின் ரஜினியிடமே தனது வேலையை காட்டுவது சரியல்ல, என்று நேர்காணல் ஒன்றில் வலைப்பேச்சு அந்தணன் பேசியுள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.