CINEMA
ஒரே செக்கில் போண்டாமணியின் மொத்த கடனையும் செட்டில் செய்த விஜயகாந்த்.. இவ்ளோ அள்ளிக்கொடுக்க மனசு வேணும்-பா..
காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் போண்டாமணி. நடிகர்கள் விவேக், வடிவேலு ஆகியோருடன் பல படங்களில் காமெடி காட்சிகளில் நடித்திருக்கிறார். குறிப்பாக கண்ணும் கண்ணும் படத்தில், போண்டாமணியை போலீஸ் தேடி வரும். நெல்லை சிவாதான் இன்ஸ்பெக்டர். ஓடிப்போன போண்டாமணி குறித்து வடிவேலுவிடம் நெல்லை சிவா விசாரணை நடத்துவார். அதன்பின், வடிவேலுவை பார்க்கும் போண்டா மணி, அண்ணே, போலீஸ் வந்தாங்களே, ஏதும் சொன்னீங்களா, என்று கேட்பார். நீதான் எதுவும் சொல்லலையேடா என வடிவேலு புலம்ப, அடிச்சுக் கூட கேப்பாக, அப்பவும் சொல்லிராதீக சொல்லிவிட்டு ஓடுவார். இந்த காமெடிக்கு சிரிக்காத ரசிகர்ளே இருக்க முடியாது.
இந்த காமெடியை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோர் ரசித்து ரசித்து சிரிப்பார்களாம். ஒருமுறை ஜெயலலிதாவை போண்டாமணி சந்தித்த போது, அந்த வசனத்தை சொல்லுங்க என கேட்டு, விழுந்து விழுந்து சிரித்தாராம். ஏனெனில் அதிமுக மேடை பேச்சாளராகவும் போண்டாமணி இருந்தவர். சினிமா, அரசியல், கலை நிகழ்ச்சிகள் என நிறைய சம்பாதித்தாலும் அன்றன்றே அதை செலவு செய்துவிடும் பழக்கம் கொண்டவர் போண்டாமணி. அதனால் வறுமையில், வாடகை வீட்டில் வசித்துள்ளார். மனைவி நோயாளி. அவரால் வீட்டில் சமைக்க முடியாது என்பதால் எப்போதுமே ஓட்டலில் தான் குடும்பத்துக்கே சாப்பாடு. மூன்று நேரமும் ஓட்டலில்தான் போண்டாமணி குடும்பமே சாப்பிடும்.
சினிமாவில் பல படங்களில் பிஸியாக நடித்துவந்த போண்டாமணிக்கு திடீரென சிறுநீரங்கள் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரது சிகிச்சைக்கு நடிகர்கள் விஜய் சேதுபதி, தனுஷ் போன்றவர்கள் உதவினார்கள். எனினும் டயாலைசிஸ் செய்துக்கொண்டு தொடர்ந்து படங்களில் நடித்து வந்த போண்டாமணி, 2 தினங்களுக்கு முன் உயிரிழந்தார். அவர் இறந்த தகவல் அறிந்து கண்ணீர் விட்டு அழுத நடிகர் விஜயகாந்த், வருத்தப்பட்டுள்ளார்.
போண்டாமணி குடும்பத்துக்கு 12 லட்சம் ரூபாய் கடன் இருப்பதாக அவருக்கு தெரிய வர, 12 லட்சம் ரூபாய்க்கு செக் எழுதி தந்து, அதை போண்டாமணியின் மனைவியிடம் கொடுக்க சொல்லி இருக்கிறார். ஒரே செக்கில் போண்டாமணியின் ஒட்டுமொத்த கடனையும் அடைத்திருக்கிறார் விஜயகாந்த். அவர் இப்போதுதான் உடல் நலம் பாதிக்கப்பட்டு மிக மோசமான நிலையில் இருந்து மீண்டு வந்திருக்கிறார். அந்த சூழலிலும் ஒரு சிறிய நடிகனுக்கு பெரிய தொகை கொடுத்து உதவிய கேப்டன் மனம் எப்போதுமே சொக்கத்தங்கம்தான்.