NEWS
ஓட்டுநர் இல்லாமல் தானாக 70 கி.மீ. ஓடிய சரக்கு ரயில்.. எப்படி நிறுத்துனாங்க தெரியமா..?
இந்தியாவில் சமீப காலங்களாக ரயில் விபத்துகள் அடிக்கடி நடந்து வரும் வேளையில் இந்த ஆண்டில் முதன் முதலாக ஒரு பெரும் விபத்திலிருந்து தப்பித்திருக்கிறது ரயில்வே துறை. ஆம்.. எங்கும் நிற்காமல், ஓட்டுநரே இல்லாமல், சுமார் 80 கி.மீ தூரத்திற்கு தானாக ரயில் செல்ல ஆரம்பித்திருக்கிறது. போகப் போக வேகம் கூட அதிகாரிகள் என்ன செய்வது தெரியாமல் திகைத்து நின்றனர். தொடரி திரைப்படத்தில்தான் இப்படி ஒரு காட்சி வரும். ஆனால் அதை நிஜமாக்கும் வகையில் இந்தச் சம்பவம் அரங்கேறி உள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கத்துவா ரயில் நிலையத்திற்கு 53 பெட்டிகள் மற்றும் 2 எஞ்சின்களை கொண்ட சரக்கு ரயில் கடந்த பிப். 25-ம் தேதி காலை 7:30 மணியளவில் வந்தடைந்தது. அதன்பின் ஏற்கனவே ரயிலில் இருந்த லோகோ பைலட்டுகள் பணியை முடித்துக்கொண்டு கத்துவாவில் இறங்கியதால் வேறு ஓட்டுநர்களைக் கொண்டு ரயில் பஞ்சாப் செல்லவிருந்தது. இந்நிலையில் ஓட்டுநர்கள் ரயிலை விட்டு இறங்கியபோது முறையாக ஹேண்ட் பிரேக் போடப்படவில்லை என கூறப்படுகிறது.
அப்போது தண்டவாளத்தின் ஜலந்தர் பிரிவில் சாய்வான பாதையில் ரயில் நிறுத்தப்பட்டிருந்ததால் தானாக ஓட்டுநர்கள் இல்லாமலே ரயில் புறப்பட்டுச் சென்றது. 70 கிலோ மீட்டருக்கு அதிகமான வேகத்தில் ரயில் பயணித்ததால் ரயில்வே அதிகாரிகள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்திருக்கின்றனர்.
பின்னர் அந்த வழியாக உள்ள அனைத்து ரயில் நிலையங்களும் மூடப்பட்டது. மேலும் லெவல் கிராசிங்குகளும் முன்னெச்சரிக்கையாக மூடப்பட்டது. சுமார் ஒன்றரை மணிநேரம் அதாவது காலை 7:25 மணி முதல் 9:00 மணி வரை ஜல்லிக் கற்களை ஏற்றிக்கொண்டு சுமார் 70 கிலோ மீட்டர் தூரம் அசுர வேகத்தில் வந்த சரக்கு ரயிலை பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் மாவட்டத்திஹ்ல் உள்ள ஊஞ்சி பஸ்ஸி அருகே பிரம்மாண்ட மணல் மூட்டைகள் மற்றும் உறுதியான மரக்கட்டைகள் உதவியுடன் நிறுத்தியிருக்கின்றனர்.
நல்லவேளையாக இந்த சம்வத்தால் யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என்றும், இந்த சம்பவத்தின் முழுமையான பின்னணி குறித்து அறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இச்சம்பவம் நாட்டில் பெரும் பரபரப்பைக் கிளப்பியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.