CINEMA
கலைஞர் வசனமா..? தெறித்து ஓடிய ரஜினி.. விட்டுக் கொடுத்த கருணாநிதி
கூர் தீட்டப்பட்ட வசனங்களும், அழகான தமிழும், படித்தாலே உணர்ச்சி பொங்கும், கேட்டாலே சிந்திக்கத் தூண்டும் எழுத்து நடைக்குச் சொந்தக் காரர்தான் கலைஞர் கருணாநிதி. அப்பேற்பட்ட முத்தமிழறிஞர் வசனத்தில் நடிக்க நான் நீ என்று போட்டி போட்டுக் கொண்டவர்கள் மத்தியில் ரஜினி வேண்டாம் என ஒதுக்கியுள்ளார்.
இதற்கான காரணம் குறித்து முரசொலி இதழில் கலைஞர் நூற்றாண்டு விழா சிறப்புக் கட்டுரையில் பதிவு செய்துள்ளார் ரஜினிகாந்த். அக்கட்டுரையில், “
தமிழ் திரை உலகின் இரண்டு ஜாம்பவான்களான சிவாஜி கணேசன் மற்றும். எம்.ஜி.ஆர் புகழின் உச்சிக்குச் செல்ல முக்கியமான காரணமாக இருந்தவர் கலைஞர். நான் 1980-ல் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தேன். அதன் தயாரிப்பாளர், கருணாநிதியின் நண்பர். அவ்வகையில் அந்தப் படத்திற்கு கலைஞர்தான் வசனம் எழுதுகிறார் என்று தெரிவித்தார். எனக்கு தூக்கி வாரிப் போட்டது. முடியாது என்றேன்.
அவரது தமிழ் நடையை என்னால் உச்சரிக்க முடியாது. எளிய வசனங்களையே என்னால் பேசுவதற்கு சிரமமாக உள்ளது என்றேன். உங்களுக்கு சிரமமாக இருந்தாலும் ஒப்புக்கொள்ளுங்கள், அவர் சம்மதித்த பிறகு, நான் எப்படி மறுக்க முடியும்? என்று தயாரிப்பாளர் என்னிடம் கேட்டார். பின் தயாரிப்பாளரிடம் அவரை சந்திக்க ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுங்கள், நானே அவரிடம் சொல்கிறேன், என்று கூறினேன்.
கோபாலபுரத்தில் கருணாநிதியை சந்தித்தேன். கலைஞர் என்னிடம் ‘கதை கேட்டேன்.. நன்றாக இருந்தது, சிறப்பாக வசனம் எழுதிடலாம்’ என்றார். ‘சார், உங்கள் வசனங்களை என்னால் பேச முடியாது, எளிமையான தமிழை பேசவே நான் சிரமப்படுகிறேன். உங்கள் வசனத்தை எப்படி என்னால் பேச முடியும்? தவறாக நினைக்க வேண்டாம்’ என்று அவரிடம் கூறினேன்.
அவர் சிரித்துக் கொண்டு, ‘எனக்கு யாருக்கு எப்படி எழுத வேண்டும் என்று நன்றாகவே தெரியும். சிவாஜிக்கு, எம்ஜிஆர்.,க்கு எழுதியது போல எழுதமாட்டேன். உங்கள் படங்களை பார்த்துள்ளேன். உங்கள் ஸ்டைலில் நான் எழுதுகிறேன்’ என்று சாதாரணமாக கூறினார். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
திடீரென ஒரு யோசனை தோன்றியது, ‘சார் படப்பிடிப்பில் சில வசனங்களை நாங்களே மாத்துவோம், உங்கள் வசனத்தை நீக்கவும், மாத்தவும் முடியாது’ என வேறு வழியில் அவரை சமாளிப்பதாக நினைத்து கூறினேன். ‘மாற்றங்கள் ஒன்றும் தவறில்லை, அது என்ன திருக்குறளா?’ என்று அவர் கூறினார். அந்த பதிலை நான் எதிர்பார்க்கவே இல்லை.
நான் அமைதியாக இருந்தேன், அதை புரிந்துகொண்ட கருணாநிதி, ‘முன்னால் யார் வசனம் எழுதினாரோ, அவரை எழுதட்டும், நான் தவறாக நினைத்துக்கொள்ள மாட்டேன். என்று கூறிவிட்டார். அதன்பின் தயாரிப்பாளரை தொடர்பு கொண்டு பணிச்சுமையைக் காரணம் காட்டி, அப்படத்திலிருந்து விலகி என்னையும் திருப்தியபடுத்திய அவருடைய செய்கை, எனக்கு மதிப்பும் மரியாதையும் பல மடங்கு அதிகரித்தது.
பின்னாளில் அவர் வசனத்தில் நடித்திருக்கலாமே என்ற குற்றஉணர்ச்சி இன்றுவரை எனக்குள் இருக்கிறது” என்று ரஜினிகாந்த் அந்த கட்டுரையில் பகிர்ந்துள்ளார்.