LIFESTYLE
மாட்டு லாடத்தை எடைக்குப் போட்டு சென்னை வந்தவர்.. ஆனால், இன்று பல கோடிகளுக்கு அதிபதி..
வந்தாரை வாழ வைக்கும் பெருமைக்குச் சொந்தமானது சென்னை நகரம். தமிழகத்தின் கடைக்கோடி கிராமத்தில் இருந்து பிழைப்பிற்காக சென்னை வந்தவர்கள் இன்று பெரும் கோடீஸ்வரர்களாக வீற்றிருக்கின்றனர். அதற்கு முக்கியக் காரணம் அவர்களது அயராத உழைப்பு, புத்திசாலித்தனம், பொறுமை எல்லாவற்றிற்கும் மேலாக தன்னம்பிக்கை.
இப்படி மேற்கண்ட அனைத்தையும் தன்னிடம் கொண்டு தனது கிராமத்தில் இருந்து மாடுகளில் கட்டியிருக்கும் லாட இரும்பை எடைக்குப் போட்டு கிடைத்த பணத்தில் சென்னை வந்து இன்று திரும்பிய பக்கமெல்லாம் ஹோட்டல்களை நிறுவி பெரும் சாம்ராஜ்யத்தையே நடத்தி வருபவர்தான் சேலம் RR பிரியாணி ஹோட்டல் அதிபர் தமிழ்ச்செல்வன்.
பத்து வயதில் தாயை இழந்தவர் வறுமை காரணமாக ஒரு வேளை மதிய உணவு கிடைக்கும் என்பதற்காக சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள ஆலச்சம்பாளையம் கிராமத்திலுள்ள கொட்டகைப் பள்ளியில் படித்தார். பள்ளிகளில் போடப்படும் மதிய உணவு அங்கு கிடைத்தது. ஆனாலும் அது வயிற்றுக்குப் போதுமானதாக இல்லை. வகுப்பறை பெஞ்சுகளை அடுக்கிக் கொடுத்தால் கூடுதலாகக் கொஞ்சம் சாப்பாடு தருவதாக ஆசிரியர்கள் சொன்னார்கள். தினசரி பெஞ்சுகளை அடுக்கிக் கொடுக்க ஆரம்பித்தார் தமிழ்ச்செல்வன். கூடுதலாகக் கிடைத்த உணவு வயிற்றுக்குப் போதுமானதாக இருந்தது.
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்க்கு கோவில் கட்டி 7 விதமான பூஜை நடக்கிறதாம்.. எங்கு தெரியுமா..?
வறுமை தலைவிரித்தாடியதன் காரணமாக 5-ஆம் வகுப்போடு பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்த வேண்டி வந்தது தமிழ்ச்செல்வனுக்கு. அப்பகுதியில் உள்ள தேனீர்க்கடையில் வேலைக்குச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் டீ கிளாஸ் கழுவத் தொடங்கினார். தனது வாழ்க்கை இப்படியே முடங்கிவிடும் என்று எண்ணி அங்கிருந்து கிளம்பி ரயில் ஏறி சென்னை வந்திறங்கியவருக்கு எதுவும் தெரியவில்லை. பின்னர் அங்குமிங்குமாகத் திரிந்து கொத்தவால் சாவடியில் காய்கறி மூட்டை தூக்க ஆரம்பித்தார்.
அதன்பின் ஓட்டலில் சப்ளையராக பணிபுரிந்தார். அப்பா சமையல் வேலை செய்துவந்ததால் உணவு தயாரிப்பு குறித்து ஓரளவுக்குத் தெரியும். அதனால் ஓட்டல் தொடங்க முடிவு செய்தார் தமிழ்செல்வன். அதற்காக தள்ளுவண்டியில் உணவு விற்பனை செய்துகொண்டிருந்தவரிடம் நெசப்பாக்கத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.அந்தத் தள்ளுவண்டிக்கு சொந்தக்காரர் சில மாதங்களில் அந்த வண்டியை தமிழ்ச்செல்வனுக்கே விற்றுவிட்டு சென்றுவிட்டார். மூன்று நண்பர்களைக்கூட்டு சேர்த்துக்கொண்டு அதை நடத்தினார் தமிழ்ச்செல்வன். ஆனால், ஒற்றுமை இல்லாத காரணத்தால் தள்ளுவண்டி வியாபாரம் முடிவுக்கு வந்துவிட்டது.
இதனிடையே திருமணம் முடித்து தன் மனைவி அமுதாவுடன் கூடுவாஞ்சேரியில் மீண்டும் ஒரு ஹோட்டலை நடத்தினார். தரம் மற்றும் ருசியின் காரணமாக தள்ளுவண்டி கடைக்கு வாடிக்கையாளர்கள் அதிகளவில் வரத்தொடங்கினர். அந்தக் காலகட்டத்திலேயே முதன்முறையாக பாசுமதி அரிசி வாங்கி தள்ளுவண்டியில் பிரியாணி வியாபாரத்தை செய்யத் தொடங்கினார் தமிழ்ச்செல்வன்.
ஒவ்வொரு நிகழ்விலும் உன்னத மனிதர் என்பதை நிரூபித்த எம்.ஜி.ஆர்.. நெகிழ வைக்கும் சம்பவம்
பின்னர் சீட்டுப் பணத்தினை எடுத்து சொந்தமாக உணவகம் ஒன்றை நடத்தினார். அதற்குப் பிலால் எனப் பெயரிட சர்ச்சைக்கு ஆளாக பின்னர் அவரின் மாவட்டம் சேலம், அப்பாவின் பெயரில் முதல் எழுத்து ஆர், உடனிருந்த ஒரு உயிர் நண்பரின் பெயர் முதல் எழுத்து ஆர் இவற்றைச் சேர்த்து சேலம் ஆர்.ஆர். பிரியாணி என்ற பெயரை வைக்க முடிவு செய்தார். அதன்படி மறுநாள் காலையில் தனது கடைக்கு சேலம் ஆர்.ஆர். பிரியாணி உணவகம் என்ற பெயரை பலகையில் எழுதிவைத்தார் தமிழ்ச்செல்வன்.
பிரியாணி ருசி, தரம் பிடித்துப்போகவே மக்கள் பெருவாரியான ஆதரவைத் தரத் தொடங்கினார்கள். சேலம் ஆர்ஆர் பிரியாணி இன்றும் மக்கள் மனதில் தனித்துவமான ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறது. அதன் விளைவாக சென்னை நகரின் பல்வேறு இடங்களிலும் கிளைகள் துவங்கப்பட்டுள்ளன.
இன்று இவரது ஊழியர்களே காரில் வந்து செல்லும் அளவிற்கு தன்னுடைய நிர்வாகத்தை திறம்பட நடத்தி பெரும் பணக்காரர்களில் ஒருவராக விளங்குகிறார் தமிழ்ச்செல்வன்.