விளையாட்டுப் போட்டிகளில் பல்வேறு திறமைகள் இருந்தும் அதை வெளிக்கொணர வாய்ப்புகள் கிடைக்காதவர்களுக்கு கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் ஒரு வரப்பிரசாதமாகும். காமென்வெல்த், ஒலிம்பிக், ஆசிய தடகளம் போன்ற விளையாட்டுப் போட்டிகளைப் போன்று கேலோ விளையாட்டுப் போட்டிகளும் கடந்த சில ஆண்டுகளாக கவனம் ஈர்த்து வருகிறது.
நமது நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு விளையாட்டு மிகவும் முக்கியமான அங்கமாக விளங்கி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக விளையாட்டுத் துறையில் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருகிறது. இந்த மகத்தான ஆற்றலை உலகளாவிய அரங்கில் காட்டப்படும் போது தான், நமது நாடு விளையாட்டுத் துறையிலும் வல்லரசாகும் கனவை நனவாக்க முடியும். மேலும் நமது நாட்டில் விளையாடும் அனைத்து விளையாட்டுகளுக்கும் வலுவான கட்டமைப்பை உருவாக்கி, இந்தியாவை ஒரு சிறந்த விளையாட்டு நாடாக நிலைநிறுத்துவதன் மூலம், இந்தியாவில் உள்ள விளையாட்டு கலாச்சாரத்தை அடிமட்டத்திலிருந்து புதுப்பிக்க, Khelo India திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Khelo India Youth Games ( KIYG ), இந்தியாவில் ஆண்டுதோறும் ஜனவரி அல்லது பிப்ரவரியில் 17 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் 21 வயதுக்குட்பட்ட கல்லூரி மாணவர்கள் என இரண்டு பிரிவுகளுக்காக நடத்தப்படும் தேசிய அளவிலான பலதரப்பட்ட அடிமட்ட விளையாட்டுக்களாகும் . ஒவ்வொரு ஆண்டும் சிறந்த 1,000 இளம் வீரர்களை சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளுக்குத் தயார்படுத்துவதற்காக 8 ஆண்டுகளுக்கு அவர்களுக்கு ₹ 5 லட்சம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் 6-வது கேலோ விளையாட்டுப் போட்டிகள் முதன்முறையாக தென்னிந்தியாவில் நடைபெற உள்ளது. இவ்விளையாட்டுப் போட்டிகளுக்கான தொடக்க விழாவினை சென்னையில் பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
அரசியல்வாதியாக இல்லாமலேயே அரசியல் களத்தில் கில்லியாடிய சோ.. ‘துக்ளக்‘ உருவான சுவாரஸ்ய சம்பவம்
வருகிற ஜனவரி 31வரை நடைபெறும் இப்போட்டிகள் சென்னை, கோயம்புத்தூர், மதுரை திருச்சி ஆகிய மாவட்டங்களில் நடைபெற உள்ளது. இதில், 18 வயதுக்குட்பட்டோர் பிரிவில் நடத்தப்படும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியில் மொத்தம் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து சுமார் 5500க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும், 1600க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்களும், 1000க்கும் மேற்பட்ட நடுவர்கள் மற்றும் 1200க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபட உள்ளனர்.
ஏற்கனவே ஜல்லிக்கட்டு வீர விளையாட்டுப் போட்டிகள் தமிழகமெங்கும் நடைபெற்று வரும் வேளையில் தற்போது கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற உள்ளது. விளையாட்டில் சாதிக்கத் துடிக்கும் இளம் வீரர்களுக்கு இப்போட்டிகள் அவர்களுக்கு ஊக்கத்தை அளித்துள்ளன.