LIFESTYLE
தமது பிறப்பினை ஒரு வரலாறாக மாற்றி சாதித்த சாந்தி துரைசாமி.. பெண்களின் சக்தியாகத் திகழும் இவர் யார் தெரியுமா?
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பேது என்ற சொல்லைக் கேட்டிருப்போம். ஆனால் இன்று அடுப்பூதும் பெண்களின் கையில் இவர் பொருள் இல்லாத இடம் இல்லை. இத்தனைக்கம் இவரும் 6-ம் வகுப்பைக் கூட தாண்டாதவர்தான். குடும்ப சூழ்நிலையால் வேலைக்குச் சென்று பின் தானே சொந்தமாக தொழில் ஆரம்பித்து இன்று கோடிகளில் புரள்வதோடு மட்டுமல்லாமல் சமுதாயத்திலும் சிறந்த சக்தியாகத் திகழ்கிறார் சக்தி மசாலா நிறுவனரான சாந்தி துரைசாமி.
சரியாக 30 வருடங்களுக்கு முன் தனது கணவருடன் இணைந்து ஆரம்ப காலகட்டங்களில் சிறிதாக ஆரம்பிக்கப்பட்ட இந்த மாசாலாப் பொடி கம்பெனி இன்று கார்ப்பரேட் நிறுனமாக மாறியிருக்கிறது. ஈரோடு மாவட்டத்தின் சந்தைகளில் விற்பனை செய்து கொண்டிருந்த இவர்களின் மசாலாப் பொடியின் தரம் நாளுக்கு நாள் பெண்கள் மத்தியில் பிரபலமாகியது. இதனைத் தொடர்ந்து மசாலாப் பொடிகளை பாக்கெட்டுகளில் அடைத்து கடைகளில் விற்பனை செய்ய ஆரம்பித்திருக்கின்றனர்.
இவர்களின் கடின உழைப்பிற்கு கைமேல் பலன் கொடுக்க நிறுவனம் மளமளவென வளரத் தொடங்கியது. அதுவரை வீடுகளில் மசாலாப் பொடிகளை அரைத்துக் கொண்டிருந்த சமையல் ராணிகள் சக்தி மசாலாவின் சுவை வீட்டுச் சுவை போல் இருப்பதை அறிந்து தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பித்தனர். மேலும் ஏன் மாங்கு மாங்குன்னு மசாலா அரைக்கீறீங்க.. சக்தி மசாலா வாங்குங்க என ஆச்சி மனோரமாவின் விளம்பரம் சக்தி மசாலாவை மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்தது.
ஊட்டி மலை ரயிலுக்கு மட்டும் ஏன் இந்த இருப்புப் பாதை..? வியக்க வைக்கும் ஜில் தகவல்கள்
சிறிய தொழிலாக ஆரம்பிக்கப்பட்டது பெரிய ஆலமரமாக வளர் ஆரம்பித்தது. இதன்பின்னர் தமன்னா, ஜோதிகா, அபிராமி, அதிதி ஷங்கர் போன்ற ஹீரோயின்களால் இன்றுவரை சக்தி மசாலா விளம்பரம் பிரபலபடுத்தப்பட்டு ஒவ்வொரு இல்லத்திலும் அஞ்சறைப் பெட்டியை காலி செய்து சக்தி மசாலா உட்கார்ந்து கொண்டது.
மசாலாப் பொடிகளில் ஆரம்பித்த இவர்களது பயணம் இன்று உணவுப் பொருட்கள் தயாரிப்பது வரை நீண்டது. சிறிய முதலீட்டில் ஆரம்பித்த சக்தி மசாலா நிறுவனத்திற்கு மற்றொரு முகமும் உண்டு. அதுதான் சமூகப் பணி. தான் வளர்ந்தால் மட்டும் போதாது தன்னைச் சுற்றியுள்ள சமூகமும் வளர வேண்டும் என்ற நோக்கில் சமூக பணிகளை ஏறெடுத்துச் செய்து வருகிறது.
அவற்றில் முதன்மையானதுதான் மாற்றுத் திறனாளிகளுக்கு வாய்ப்பளிப்பது. குறையொன்றும் இல்லை கண்ணா என்ற வாசகத்தை அடிப்படையாகக் கொண்டு தமது நிறுவனத்தில் பெரும்பாலான பணியிடங்களுக்கு மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்தனர். மேலும் சக்திதேவி அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கி மருத்துவமனை, மறுவாழ்வு மையம், சிறப்புப் பள்ளி ஆகியவற்றோடு, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு மரம் நடும் பணி, அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பது என்பது உட்பட பல சேவைகளை ஆற்றிவருகிறார் சாந்தி துரைசாமி.
நாடும் நம் சந்ததியினரும் நலமுடன் வாழ பசுமை உலகம் படைப்பதில் தீவிரமாக கடந்த பல ஆண்டுகளாக மரம் வளர்ப்பு மற்றும் மழைநீர் சேமிப்புத் திட்டத்தில் ஆர்வம் காட்டி வருகிறார்கள் இத்தம்பதியினர். மேலும் பேரிடர் காலங்களில் துயர் துடைக்க ஓடோடி வந்து முதலமைச்சரின் நிவாரண நிதிக்காக கோடிக்கணக்கில் பண உதவியும் வழங்கி இன்று கார்ப்பரேட் தொழிலுடன் சமூக அக்கறையையும் இரு கண்களாக பாவித்து சக்தியுடன் உழைத்து வருகின்றனர் சக்தி மசாலா நிறுவனத்தினர்.