LIFESTYLE
இதவிடவா உங்களுக்குச் சோதனை வந்திடப் போகுது..? தாழ்வு மனப்பான்மையை தன்னம்பிக்கையாக மாற்றி ஜெயித்த பாலம் கல்யாணசுந்தரம்
அப்துல் கலாமைப் போலவே திருமணமே செய்து கொள்ளாமல் தனது வாழ்நாளையே ஏழைகளுக்காகவும், குழந்தைகளுக்காகவும் அர்ப்பணித்து வருபவர் பாலம் கல்யாண சுந்தரம். ஐ.நா. சபை வெளியிட்ட இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற மனிதர்களில் பாலம் கல்யாணசுந்தரமும் ஒருவர்.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சொந்த ஊராகக் கொண்ட பாலம் கல்யாணசுந்தரம் நூலக அறிவியலில் பட்டம் பெற்று கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் நூலகராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தன் இளம் வயதில் தன்னுடைய உடல் குறைபாடால் தாழ்வு மனப்பான்மை அதிகம் கொண்டு தற்கொலைக்கு முயன்றவர்.
காரணம் அவரது குரல். எப்போதாவது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், கல்யாணசுந்தரம் பேசுவதை நீங்கள் கேட்டிருந்தால், அவரது மனக்குறையை உங்களால் புரிந்து கொள்ள முடியும். அப்படியே பெண் குரல். அதனால் ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மை. எனவே தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து விட்டார்.
கலைஞர் வசனமா..? தெறித்து ஓடிய ரஜினி.. விட்டுக் கொடுத்த கருணாநிதி
தற்கொலை செய்து கொள்வதற்கு முன், தனக்கு கடிதம் மூலம் மட்டுமே அறிமுகமான ஒரு பத்திரிகையாளரை சந்திக்க முடிவு செய்தார். அவரது அலுவலகம் சென்று சந்தித்தார். அழுதபடியே தன் தற்கொலை முடிவை சொன்னார்.
அமைதியாக கல்யாண சுந்தரம் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த அந்தப் பத்திரிகையாளர்,
தன்னிடம் இருந்த ஒரு சில புத்தகங்களை கல்யாண சுந்தரத்திடம் கொடுத்து படித்துக் கொண்டிருக்கச் சொன்னார். அதன்பின் கல்யாண சுந்தரத்தை கடற்கரைக்கு அழைத்துச் சென்றார் அந்தப் பத்திரிகை ஆசிரியர்.
அங்கே கல்யாண சுந்தரத்துக்கு, அந்தப் பத்திரிகையாளர் ஒரு சில உலக சுவாரஸ்யங்களை எடுத்துச் சொன்னார். அது இதுதான் : “தம்பி! ஒரு மனிதனின் வாழ்க்கை என்பது, அவன் எப்படிப் பேசுகிறான் என்பதைப் பொறுத்ததல்ல. அவனைப்பற்றி மற்றவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதைப் பொறுத்ததாகும். எதைக் குறை என்று நினைக்கிறாயோ, அதையே நிறையாக நினைத்துக் கொள்.
உலகின் மாபெரும் இசைஞானி பீத்தோவனுக்கு காது கேட்காது. உலகையே வியக்க வைத்த ஹெலன் கெல்லர் கண், காது, வாய் ஊனமுற்றவர். உலகையே ஆட்டி வைத்த ஹிட்லர் குள்ளமானவர். ஆகவே “உன் குரலைப் பற்றிக் கவலைப்படக்கூடாது. உன்னைப் பற்றி நாளை உலகமே பேச உள்ளது.
எம்.ஜி.ஆருடன் முகமது அலி.. உலகையே திரும்பிப் பார்க்க வைத்த இரு ஜாம்பவான்கள்
என்னால் மெல்லிய குரலில்தான் பேச முடிகிறது என்கிறாய். ஆனால், தாங்கள் விரும்பியதை பேசவே முடியாமல் லட்சக்கணக்கான பேர்கள் இந்த உலகத்தில் இருக்கிறார்களே. அவர்களைப் பார்த்து கவலையை விடு. மனிதன் குறைவாகப் பேச வேண்டும். நிறைய செய்ய வேண்டும். நீ அதிகம் பேசாதிருக்கவே இந்தக் குரல்.
எனவே, உன் பேச்சு பற்றி உனக்கு கலக்கம் கூடாது. குறைகளை நினைத்து கவலைப்படுவதைவிட எது குறையோ, அதுவே உன் தனித்துவமான நிறை என்று உறுதி கொண்டு செயல்படு ! எதை நீ தடை என்று எண்ணுகிறாயோ, அதை வைத்து வாழ்வில் சாதனை செய்ய வேண்டும். அவன்தான் வெற்றியாளன். அதற்கான முயற்சியில் நீ ஈடுபட வேண்டும்.
.
அவரது பேச்சில் தெளிவு கொண்டு இனி ஒருபோதும் தற்கொலை எண்ணம் கொள்வதில்லை என உறுதியாக முடிவெடுத்தார். அதன் பின் பாலம் கல்யாண சுந்தரம் நிறைய படித்தார். கல்லூரி ஒன்றில் நூலகராக பணியாற்றி ஓய்வு பெற்ற பின், அதன் மூலம் வந்த பென்ஷன் தொகை 11 லட்சம் ரூபாயை , ஒரு ரூபாயைக் கூட தொடாமல், அப்படியே குழந்தைகள் நலநிதிக்காக அள்ளிக் கொடுத்தார்.
இவரைப் பற்றி கேள்விப்பட்ட ரஜினி, இந்த கல்யாண சுந்தரத்தை தன்னுடைய தந்தையாக தத்து எடுத்துக் கொள்வதாக அறிவித்தார். அது மட்டும் அல்ல.. தன் வீட்டிலேயே அவர் தங்கிக் கொள்ள, சகல வசதிகளையும் செய்து கொடுத்தார். சில காலம் அங்கே தங்கி இருந்த கல்யாண சுந்தரம், தன் சுதந்திரத்துக்கும், ரஜினியின் சுதந்திரத்திற்கும் இது சரிப்படாது என்று முடிவெடுத்து, ரஜினிக்கு நன்றி சொல்லி விட்டு வெளியே வந்து விட்டார்.
கண்ணீருடன் கல்யாண சுந்தரத்தை அனுப்பி வைத்தார் ரஜினி. அதன் பின்னும் அடுக்கடுக்காக சாதனைகள் பல செய்த கல்யாண சுந்தரத்தை “20-ம் நூற்றாண்டின் சிறந்த மனிதர்” என்று ஐக்கிய நாடுகள் சபை, தேர்வு செய்து பாராட்டி மகிழ்ந்தது. அவரை சாதனை செய்யத் தூண்டிய அந்தப் பத்திரிகையாளர் வேறு யாருமல்ல ‘கல்கண்டு’ தமிழ்வாணன் தான்.