TRENDING
எம்.ஜி.ஆருடன் முகமது அலி.. உலகையே திரும்பிப் பார்க்க வைத்த இரு ஜாம்பவான்கள்..
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரும், பாக்சிங் விளையாட்டின் பிதாமகன் என்று போற்றப்படும் முகமது அலியும் ஒரே மேடையில் சந்தித்துக் கொண்ட அதிசயம் நடந்திருக்கிறது. அது 1980-ம் வருடம் தான். அப்போது பாக்ஸிங் விளையாட்டு இந்தியாவில் பிரபலமாகாத நேரம் அது. முகமது அலியின் புகழால் இவ்விளையாட்டின் மீதான கவனம் அதிகரித்தது. தொடர்ந்து இந்தியாவிலும் பல்வேறு குத்துச் சண்டைப் பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டன.
தமிழ்நாட்டிலும் அமெச்சூர் பாக்ஸர்கள் சங்கம் தனது பங்கிற்கு இந்த விளையாட்டைப் பிரபலப்படுத்தியது. இந்நிலையில் தான் தமிழ்நாடு அமெச்சூர் பாக்ஸர்கள் சங்கம் நிதி திரட்டுவதற்காக உலக சாம்பியன் முகமது அலியை வேடிக்கை குத்துச் சண்டைப் போட்டிக்காக அழைத்து வந்திருக்கின்றனர். அப்போது சென்னை கன்னிமாரா சொகுசு ஹோட்டலில் முகமது அலி தங்கியிருந்தார். மேலும் முகமது அலி, ஜிம்மி எல்லீஸ்பங்கேற்பது குறித்த விளம்பரங்களும் அப்போது இடம்பெற்றதால் தமிழ்நாடே இருவர் மோதலையும் கண்டு களிக்க தயாராக இருந்தது.
அன்று சென்னை நேரு ஸ்டேடியம் முகமது அலியைக் கண்டவுடன் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களால் குலுங்கியது. மேலும் அவருக்கு விமான நிலையத்திலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழர்களின் பாசத்தால் திக்குமுக்காடிப் போன முகமது அலி வேடிக்கை குத்து சண்டையில் முன்னாள் ஹெவி வெயிட் சாம்பியனான ஜிம்மி எல்லீஸ் உடன் மோதினார். இவர்கள் இருவரும் மோதும் போட்டியை அப்போதைய தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் துவக்கி வைத்தார்.
கின்னஸ் ரெக்கார்ட் செய்த தமிழ் நடிகர் நடிகைகள் – அடேங்கப்பா, இது வேற லெவலா இருக்குதே…?
மூன்று ஜாம்வான்களையும் மேடையில் கண்டவுடன் ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர். அரங்கமே அதிர்ந்தது. நிதிக்காக டிக்கெட் கட்டணமாக ரூ.100, 70, 50, 20, 10 ஆகிய முறைகளில் பெறப்பட்டது. மேலும் இந்தப் போட்டியில் பலருடன் முகமது அலி வேடிக்கையாக மோதினார். கடைசியாக பத்துவயது சிறுவன் மேடை ஏறினான். அவனுக்கு போக்குகாட்டும் விதமாக துள்ளிக்குதித்தபடி மேடையை சுற்றிச்சுற்றிவந்த பின்னர், அவனை தனது முகத்தில் குத்துமாறு கூறிய முகமது அலி, அவனது உயரத்துக்கு தக்கவாறு முழங்காலிட்டு அமர்ந்தார்.
பின்னர் தொடர்ந்து நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், செய்தியாளர் ஒருவர் குத்து சண்டையில் இடது ஹூக் முறையில் இருக்கும் அவரது பலவீனத்தை குறித்து கேட்டார். அதற்கு, அந்த செய்தியாளரை களத்தில் மோதி பார்ப்போமா என சவால்விட்டார் அலி. மேலும், “ நான் கலந்து கொண்ட 49 போட்டிகளில் 32 போட்டிகளில் எனது எதிர் போட்டியாளர்களை போட்டியிலிருந்தே வெளியேற்றி இருக்கிறேன். நான் அதிகம் ஒன்றும் இதனால் கஷ்டப்படவும் இல்லை. எனது முகத்தை பாருங்கள். ஏதேனும் காயங்களையோ அல்லது தழும்புகளையோ பார்க்கிறீர்களா? தெளிவாகவும் அழகாகவும் உங்களுக்கு தெரியவில்லையா ?அதனால் தான் நான் குத்து சண்டையில் சிறந்தவனாக இருக்கிறேன்.“ என்று பதிலளித்தார்.