HISTORY
அன்று திக்குவாய், அழகில்லை என நிராகரிக்கப்பட்டவர் இன்று உலகையே சிரிக்க வைக்கும் நவீன சார்லி சாப்ளின்
பழைய கால கருப்பு வெள்ளைப் படங்களில் வசனங்களே இல்லாமல் வயிறு குலுங்க சிரிக்க வைத்து உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் நீங்க இடம் பிடித்தவர் சார்லி சாப்ளின். அன்று கருப்பு வெள்ளைப் படத்தில் சார்லி சாப்ளின் சாதித்தது போல இருபதாம் நூற்றாண்டில் வண்ணப்படங்களில் வசனமே இல்லாமல் வயிறு குலுங்கச் சிரிக்க வைத்த கதாபாத்திரம் தான் ‘மிஸ்டர் பீன்‘,
இந்த மிஸ்டர் பீன் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து நடித்தவர் தான் ரோவன் அட்கின்சன். எழுத்தாளர், நடிகர் மற்றும் நகைச்சுவையாளர் என பன்முகத் தன்மைக் கொண்ட இவரின் தனிப்பட்ட பக்கங்கள் மிகவும் கொடுமையானது. திக்குவாய் பிரச்சினையால் அவதிப்பட்ட இவர் அதனால் பல இடங்களில் அவமானப்படுத்தப்பட்டுள்ளார். மேலும் சினிமா மற்றும் நாடகங்களில் நடிக்க முயற்சி செய்த போது அழகில்லை எனவும் நிராகரிக்கப்பட்டிருக்கிறார்.
அடிவாங்கிய கல் தானே சிலையாக மாறும் என்பதைப் போல் தன்மீது விழுந்த விமர்சனங்களை உளியாக எடுத்துக் கொண்டு தன்னைத் தானே செதுக்க ஆரம்பித்தார். பல புகழ்பெற்ற நாடகங்களை எழுதினார். மேலும் தானே திரையில் தோன்றி நடிக்க ஆரம்பித்தார். இவரின் நகைச்சுவை பாணி மக்களை வெகுவாகக் கவரேமே விரைவிலேயே மேற்கத்திய நாடுகளில் பிரபலமானார்.
முதன் முதலாக Not the Nine O’Clock News என்ற பிபிசியின் நிகழ்ச்சியில் தோன்றினார் அட்கின்சன். இந்த நிகழ்ச்சியை அவரது நண்பர் ஒருவரே தயாரித்தார். அதன் பிறகு நிகழ்ச்சிகளில் தோன்றினாலும் அவர் வெற்றியடைய முடியவில்லை. ரோவன் அட்கின்சன் தனக்காக தானே உருவாக்கிய மிஸ்டர் பீன் கதாப்பாத்திரம் அவரது வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியது. ஐரோப்பிய நாடுகளின் மிகப் புகழ் பெற்ற நவீன கால சார்லி சாப்ளினாக வலம் வந்த ரோவன் அட்கின்சனின் புகழ் மிஸ்டர் பீன் கதாபாத்திரத்தால் உலகம் முழுவதும் பரவியது.
யார் இந்த சைதை துரைசாமி..? ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்டாடும் காரணம் இதானா?
இவரது மேனரிசத்திற்கும், வசனமே இல்லாமல் உடல் மொழியிலேயே நடிக்கும் காட்சிகளுக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அடிமையாகினர். இவரது தொடர்களில் வரும் மிஸ்டர் பீன் அறிவுப் பூர்வமாக சில செயல்களைச் காமெடியாகச் செய்வதால் அந்த நிகழ்ச்சி உலகெங்கிலும் உள்ள முன்னனி தொலைக்காட்சிகளில் டி.ஆர்.பியில் முன்னிலை வகித்தது. அது மிஸ்டர்பீனுக்கு இரண்டாவது ரவுண்டு என்றே சொல்லலாம்.
இவரின் சாதனைகளையும், மக்களை மகிழ்விக்கும் கலையையும் பெருமைப்படுத்தும் விதமாக பிரிட்டனின் எலிசபெத் மகாராணி இவருக்கு மூன்றாவது உயரிய விருதான சிபிஇ(CBE) விருதை வழங்கி கவுரவித்தார். 65 வயதைக் கடந்த நிலையிலும் இன்றும் உற்சாகமாக சில திரைப்படங்களிலும், விழாக்களிலும் பங்கேற்று இன்னமும் மக்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கிறார் இந்த நவீன சார்லி சாப்ளின்.