Connect with us

HISTORY

150 ஆண்டுகளுக்கு முன்பே செல்ஃபி எடுத்த இந்திய மகாராஜா? அப்போவே வேற லெவல் பண்ணிருக்காரே!

நம்மிடம் இப்போது கேமரா பொருத்தப்பட்ட மொபைல் ஃபோன்கள் இருக்கின்றன. குறிப்பாக நமது மொபைல் ஃபோன்களுக்கு முன் பக்கமும் கேமரா இருக்கிறது. ஆதலால் மிகவும் எளிதாக செல்ஃபி எடுத்து விடுகிறோம். ஆனால் 150 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மகாராஜா ஃபிலிம் ரோல் கேமராவில் செல்ஃபி எடுத்திருக்கிறார். ஆம்!

19 ஆம் நூற்றாண்டின் மையப்பகுதியில் ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் பகுதியின் மன்னராக பதவியேற்றவர் இரண்டாம் ராம் சிங். இவர் ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்தவர். எனினும் அந்த காலகட்டத்தில் பிரிட்டிஷாருடன் மிகவும் நெருக்கமாக பழகி வந்தார். மற்ற ராஜபுத்திர மன்னர்கள் போல் அல்லாமல் பழமைவாதத்தை தவிர்த்து மிகவும் நவீனமான சிந்தனையை கொண்டிருந்தார்.

   

பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்ட காலகட்டத்தில் பெண்களுக்கென்றே பள்ளிக்கூடம் ஒன்றை கட்டினார். அதே போல் தகுதியானவர்கள் பயிலக்கூடிய மருத்துவ கல்லூரி ஒன்றையும் கட்டினார். ஆக்ராவுக்கும் அஜ்மீருக்கும் இடையே 127 மைல்கள் நீளம் கொண்ட சாலையை அமைத்தார். எரிவாயு தெரு விளக்குகள் அமைப்பது, பொது நூலகம் கட்டுவது, குழாய் மூலமாக தண்ணீர் வசதி செய்துகொடுப்பது, விளையாட்டு மைதானம் அமைப்பது, அடிமை முறை, குழந்தை தொழிலாளர் முறை போன்றவற்றுக்கு எதிராக செயல்பட்டது என ஒரு முற்போக்கு மன்னராகவே வலம் வந்தார்.

இது ஒரு பக்கம் என்றால், இவருக்கு புகைப்படக்கலையின் மீது அதிகளவு ஆர்வம் இருந்தது. கிழக்கிந்திய கம்பெனியில் மருத்துவராக பணிபுரிந்த முர்ரே என்பர் மூலமாக இரண்டாம் ராம் சிங்கிற்கு புகைப்படக்கலை அறிமுகமானது. கேமராக்களை எப்படி கையாள வேண்டும், ஃபிரேம் எப்படி இருக்க வேண்டும், எடுத்த புகைப்படங்களை நெகட்டிவில் இருந்து எப்படி ஃபோட்டோவாக மாற்றவேண்டும் என புகைப்படக்கலை குறித்த அனைத்தையும் முர்ரே சொல்லித்தந்தார்.

அதன் பின் மன்னரை கையிலேயே பிடிக்க முடியவில்லை. கேமரா உட்பட பல புகைப்படக் கருவிகளை ஜெய்ப்பூருக்கு வரவழைத்தார். அவரது அரண்மனையில் இருந்த பெண்களுக்கெல்லாம் வித விதமாக உடைகளை அணியவைத்து புகைப்படங்களை எடுத்து தள்ளினார். மேலும் தனது அரண்மனை வேலையாட்கள் பலரையும் பல சுற்றுலா தளங்களையும் புகைப்படம் எடுத்திருக்கிறார். தான் இறக்கும் வரை கிட்டத்தட்ட 6000க்கும் மேலான புகைப்படங்களை எடுத்து தள்ளியிருக்கிறார் மன்னர் இரண்டாம் ராம் சிங்.

இதில் அவர் தன்னை தானே எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் அடக்கம். அவரே ஃபிரேம் எல்லாம் செட் செய்து பின்னணியில் எந்த பொருட்கள் இருக்கவேண்டும் இருக்க கூடாது என்பதை முடிவு செய்து, கேமரா பட்டனை அழுத்துவதற்கு மட்டும் தனது அரண்மனையின் ஒரு வேலையாளுக்கு சொல்லித்தந்து ஃபிரேமிற்குள் சென்று உட்கார்ந்து தன்னை தானே பல விதங்களாக புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார். தன்னுடைய அரண்மனையில் நெகட்டிவ்களை கழுவுவதற்கு தனி அறையையும் வடிவமைத்துக்கொண்டார்.

அதுமட்டுமல்லாது, அந்த சமயத்தில் புகைப்படக்கலை சம்மந்தமாக வெளிவந்துகொண்டிருந்த பத்திரிக்கைகளையும் வாங்கி படித்தார். ஆங்கிலேயர்களுடனான பழக்கத்தால் அவருக்கு ஆங்கிலம் படிக்கவும் பேசவும் தெரிந்திருந்தது. மேலும் அந்த காலகட்டத்தில் செயல்பட்டுக்கொண்டிருந்த Bengal Photographic Society என்ற அமைப்பிலும் தன்னை இணைத்துக்கொண்டார். இவ்வாறு புகைப்படக்கலையின் மேல் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த இரண்டாம் ராம் சிங் 1880 ஆம் ஆண்டு தனது 47 ஆவது வயதில் இறந்துப்போனார்.

அவர் இறந்த பிறகு அவர் எடுத்த புகைப்படங்களை அவர் புகைப்படங்கள் எடுப்பதற்காக பயன்படுத்திய அறையில் போட்டு பூட்டிவிட்டனர். அதன் பின் பல ஆண்டுகள் கழித்து ஜெய்ப்பூர் அருங்காட்சியகத்தின் காப்பாளராக பணியாற்றிக்கொண்டிருந்த யத்வேந்திர சஹாய் என்பவர் அந்த அறையை திறந்து பல புகைப்படங்களை மீட்டெடுத்தார்.

அதில் சில புகைப்படங்கள் சிதைந்து போயின. மிச்சமுள்ள புகைப்படங்கள் அனைத்தும் ஜெய்ப்பூர் அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டிருக்கிறது.

Continue Reading

More in HISTORY

To Top