HISTORY
8000 கடன் வாங்கி ஆரம்பித்த நிறுவனம்.. இன்று 9000 கோடி சொத்துக்களை பெருக்கியது எப்படி? கோவை KPR மில்ஸ்-ன் அசுர வளர்ச்சி
ஒவ்வொரு ஆண்டும் உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலையும், ஒவ்வொரு நாட்டின் பணக்காரர்கள் பட்டியலையும் வெளியிடும் போர்பஸ் இதழில் 2023-ம் ஆண்டிற்கான இந்தியப் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறார் கோவைத் தமிழன் கே.பி.ராமசாமி. யார் இவர்? அப்படி என்ன தொழில் செய்கிறார் என்று பார்ப்போமா?
கோவை, பெருந்துறைக்கு அருகில் கள்ளியம்புதூர் என்கிற குக்கிராமத்தில் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் மூத்த மகனாகப் பிறந்தவர் கே.பி.ராமசாமி. பத்தாம் வகுப்பு படிக்கும்போதே அவரை விவசாயத்தில் ஈடுபடுத்த ஆர்வம் காட்டினார், அவரது அப்பா பழனிச்சாமிக் கவுண்டர்.
விவசாயத்தில் சிலகாலம் ஈடுபட்டாலும், அது அவர் விருப்பத்துக்குரிய தொழிலாக இல்லை. ‘இன்னும் இன்னும் உயரத்துக்குப் போகவேண்டும்’ என்ற எண்ணம் கொண்டவரின் கண்களில் பட்டது பவர்லூம் தொழில். தனது கனவினை நனவாக்கும் விதமாக உறவினரிடம் ரூ.8000 கடன் வாங்கி முதன் முதலாக பவர்லூம் மிஷினை வைத்து துணிகள் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கிறார். இந்தத் தொழில் அவருக்கு வெற்றியைக் கொடுக்கவே அடுத்து திருப்பூரில் ஜவுளி ஏற்றுமதித் தொழிலில் இறங்கினார். அதிலும் வெற்றி .
தோல்வி மேல் தோல்வி.. மனம் தளராமல் கற்பனையை காசாக்கி ஹாரிபாட்டர் தந்த ரௌலிங்
தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்தவர் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்கையில் பிறந்தது மில் ஐடியா. 1995-ல் சுமார் 6,000 ஸ்பிண்டில்களுடன் முதன் முதலாக தனது கே.பி.ஆர் மில்ஸ்-ஐ ஆரம்பித்தார். தொழிலாளர்களை தங்களுடைய வளாகத்திலேயே தங்க வைத்து வேலை செய்ய வைப்பதன் மூலம் தனது நிறுவனத்தை தொடர்ந்து முன்னேற்றினார். இதன் விளைவாக 2001-ல் கருமத்தம்பட்டியிலும், 2003-ல் நீலாம்பூரிலும், 2005-ல் அரசரூரிலும் என்று அடுத்தடுத்த மில்கள் பெருக ஆரம்பித்தன.
இவரது அயராத உழைப்பையும், தொடர்ந்து பெறும் வெற்றிகளையும் கணித்த வெளிநாட்டு நிறுவனங்கள் இவரது மில்களில் முதலீடு செய்யத் தொடங்கின. ஆடைத்தொழிலை மட்டுமே செய்து வந்த கே.பி.ஆர் மில்ஸ் தொடர்ந்து சர்க்கரை, எத்தனால் தயாரிப்பு மில்களையும் திறந்தது. இதனால் எண்ணற்றோர் வேலைவாய்ப்பினைப் பெற்றனர். மேலும் தமிழ்நாட்டில் பல காற்றாலைகளையும் நிறுவியிருக்கிறது இவர் நிறுவனம்.
மேலும் கடந்த 2019-ல் Faso என்ற ஆண்கள் உள்ளாடை பிராண்டையும் மார்க்கெட்டில் அறிமுகப் படுத்தியது. இப்படி படிப்படியாக வளர்ந்த கே.பி.ஆர் மில்ஸ்-ன் இன்றைய சொத்து மதிப்பு சுமார் ரூ.9100 கோடிக்கு மேல். தன்னுடைய நிறுவனங்களில் பெரும்பாலும் பெண்களையே வேலைக்கு அமர்த்தி அவர்கள் முன்னேற்றத்தில் கே.பி.ஆர் மில்ஸ் பெரும் பங்கு வகித்தது. மேலும் கே.பி.ஆர் பொறியியல் கல்லூரி மற்றும் கே.பி.ஆர் அறக்கட்டளை ஆகியவற்றி நிறுவி சமூக சேவைகளையும் செய்து வருகிறார் கே.பி.ராமசாமி.