HISTORY
நெல்லை அண்ணாச்சிகள் உருவாக்கிய உதயம் தியேட்டர்.. நெகிழ வைக்கும் வரலாறு..
சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கிய உதயம் தியேட்டரும் மூடுவிழா காண உள்ளது. கடந்த சில நாட்களாக சென்னை உதயம் தியேட்டரும், கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டும் தான் சோஷியல் மீடியாக்களில் வைரலாக வலம் வருகிறது. சினிமா ரசிகர்களின் கோவிலாக விளங்கிய உதயம் தியேட்டர் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்தது. சென்னை அசோக் பில்லர் சந்திப்பில் உள்ள இந்த தியேட்டர் சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக இருந்தது.
வழக்கமாக நெல்லை, தூத்துக்குடி அண்ணாச்சிகள் இடம்பெயர்ந்து சென்னை மாநகருக்கு வந்து துணிக்கடைகள், பாத்திரக் கடைகள் என வைத்துக் கொண்டு கல்லா கட்ட ஆரம்பித்த தருணத்தில் சற்று மாற்றி யோசித்து தியேட்டர் கட்டலாம் என முடிவெடுத்தனர் அந்த அண்ணாச்சிகள்.
நெல்லை ராதாபுரம் தாலுகா, உதயத்தூரில் இருந்து வந்த அந்த குடும்பம் 1983ல் அசோக் பில்லர் சந்திப்பு அருகே நிலம் வாங்கி தியேட்டர் கட்டியது . முதலில் ஒரு ஸ்கிரீன் வைத்து கட்டப்பட்ட தியேட்டருக்கு என்ன பெயர் வைப்பது என்று யோசித்த போது தங்களின் உதயத்தூர் நினைவாக உதயம் தியேட்டர் என்று பெயர் வைக்கப்பட்டது. பரமசிவம் பிள்ளை மற்றும் அவரின் 5 சகோதரர்கள் என்று 6 பேர் சேர்ந்து உருவாக்கப்பட்ட தியேட்டர் இது.
அதன்பின் வளர வளர தியேட்டரில் கூடுதல் ஸ்கிரீன் போடப்பட்டு உதயம், சந்திரன், சூரியன், உதயம் மினி என்று மாற்றப்பட்டது. சென்னையில் 20 வருடங்களுக்கு முன்பு வரை கூட சத்யம் , அபிராமிக்கு அடுத்தபடியாக பெரிய தியேட்டராக விளங்கியது இதுதான். இது சென்னையின் மிகப்பெரிய மற்றும் வெற்றிகரமாக இயங்கும் சினிமா தியேட்டர்களில் ஒன்றாக இருந்தது.
எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் ஆகிய முன்னணி நாயகர்களின் பல படங்கள் இங்கு வெளியாகி சூப்பர் ஹிட் ஆகின. பல படங்கள் 100 நாட்களைக் கடந்தும் இங்கு ஓடிய வரலாறு உண்டு. முதல் மரியாதை, பூவே பூச்சூடவா, சிந்து பைரவி, ரோஜா, புன்னகை மன்னன் என பல படங்கள் இங்கு வெளியிடப்பட்டு மாபெரும் வெற்றி அடைந்தன.
இந்நிலையில் மல்டிபிளக்ஸ் தியேட்டர் வருகை, ஓடிடி தளங்கள் என மாறிய சினிமாவால் தியேட்டரில் படம் பார்க்க வரும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்தது. ஒரு கட்டத்தில் நஷ்டத்தினைச் சந்திக்க இந்த தியேட்டரின் ஷேர் 6 அண்ணன் – தம்பிகளின் குடும்பத்தில் பிறந்த எல்லோருக்கும் கொஞ்சம் கொஞ்சமாக பிரித்து அளிக்கப்பட்டது. அதன்பின் அது வேறு சில நிறுவனங்களுக்கும் கூட சென்றது. ஒழுங்கான ஒரு தலைமை இல்லாத காரணத்தால் 2000களின் தொடக்கத்தில் இந்த தியேட்டர் பெரிய பராமரிப்பு இன்றி பின்தங்கியது.
அதன்பின் கடந்த 2009ல்தான் சென்னையில் உள்ள உதயம் திரையரங்கை அதன் நிறுவன உறுப்பினர் பரமசிவம் பிள்ளை மீண்டும் வாங்கினார். அந்த தியேட்டரை உருவாக்கிய 6 சகோதரர்களில் அப்போது உயிரோடு இருந்த ஒரே நபர் இவர்தான். சொத்துக்களை குடும்பத்திற்குள் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியின் ஒரு பகுதியாக ரூ.80 கோடிக்கு வாங்கினார்.
அதன்பின் இந்த தியேட்டரை மீண்டும் 2013ல் விற்கும் முடிவை எடுத்தனர். ஆனால் அப்போது தியேட்டர் விற்பனைக்கு வரவில்லை. மாறாக வாங்க பெரிதாக ஆள் இன்றி அப்படியே இருந்தது. உதயம் தியேட்டரில் என் இதயத்தை தொலைச்சேன்.. என்று பாடல் தொடங்கி சென்னையின் லேண்ட்மார்க் பகுதிகளில் ஒன்றாக இந்த தியேட்டர் இருந்தது. இந்த நிலையில்தான் அந்த தியேட்டர் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது அந்த தியேட்டர் இருக்கும் பகுதியை காசாகிராண்ட் நிறுவனம் வாங்கி உள்ளது. இப்போது அந்த வழியாகச் செல்பவர்கள் உதயம் தியேட்டரை ஏக்கத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.