LIFESTYLE
ரூ.50,000 சம்பளம் to 1200 கோடி வர்த்தகம்.. சின்ன மசாலாப் பொடி கம்பெனியை கார்ப்பரேட் நிறுவனமாக மாற்றிய ஆச்சி மசாலா சரித்திரம்
பிரபல கம்பெனியின் ஹேர்டையை ஊர் ஊராகச் சென்று விற்பனை செய்து அதில் வந்த வருமானத்தில் குடும்பம் நடத்திக் கொண்டிருந்தவர் இன்று உலகம் முழுவதும் சக்கைப் போடு போடும் மசாலா கம்பெனியின் முதலாளியாக மாறி சாதனை புரிந்திருக்கிறார். தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் என்னும் சிற்றூரைச் சேர்ந்த பத்மசிங் ஐசக் எம்.பி.ஏ. படிப்பை முடித்து விட்டு தனியார் நிறுவனத்தில் மாதச் சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார்.
மாத சம்பளத்தில் வாழ்கை நடத்திக் கொண்டிருந்த பத்மசிங் ஐசக்கிற்கு கனவுகள் விரிந்தன. சிறிய நகரங்கள் முதல் ஊர்கள் வரை சிறிய மசாலா நிறுவனங்கள் மட்டுமே இந்த சந்தையில் கோலோச்சி கொண்டிருந்த காலத்தில் அமைப்பு சாரா நிலையில் இயங்கி வரும் மசாலா விற்பனை தொழிலில் மிகப்பெரிய வாய்ப்பு இருப்பதை அறிந்தார். தனது பணியை ராஜினாமா செய்த ஐசக், 1996 ஆம் ஆண்டு தனது மனைவின் உறுதுணையுடன் மசாலா நிறுவனத்தை தொடங்கினார்.
தமிழகத்தின் தென்மாவட்டங்களில் பாட்டியை ஆச்சி என்றுதான் அழைப்பார்கள். மக்கள் மத்தியில் மிகவும் தொடர்புள்ள இந்தப் பெயரையே தனது பிராண்டின் பெயராக மாற்றினார். மேலும் குறிப்பாக பெண்கள் ஆட்சி செய்யும் இடம் என்றால் அது சமையலறைதான். ஒரு நல்ல சமையலால் குடும்பத்தில் நல்ல பிணைப்பை உருவாக்க முடியும். அதனாலும் ஆட்சி என்பது ஆச்சி என்றானது.
ஆரம்பத்தில் ஒரே ஒரு மாசாலாப் பொடியை மட்டும் தயாரித்து விற்பனை செய்து வந்த பத்மசிங் ஐசக் நல்ல வரவேற்பு கிடைத்ததின் காரணமாக தனது தொழிலை விரிவுப் படுத்தினார். முதலில் மசாலா பொருட்கள் மட்டுமே தயாரித்து வந்த ஐசக் மசாலாவுடன், கோதுமை பொருட்கள், ஊறுகாய், புளி சாத பொடி, பிஸ்கேட் மற்றும் ஜாம் போன்றவற்றையும் தயாரிக்கத் துவங்கி இன்று சத்துணவுகள், ஆயுர்வேத பொருட்கள் போன்றவற்றையும் தயாரித்து வருகிறார்.
இன்று ஆச்சி குழுமத்தின் கீழ் ஆச்சி மசாலா ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட், ஆச்சி ஸ்பைசஸ் & ஃபுட்ஸ் பிரைவேட் லிமிடெட், ஆச்சி ஸ்பெஷல் ஃபுட்ஸ் பிரைவேட் ஃபுட்ஸ் லிமிடெட் போன்ற நிறுவனங்களைக் கொண்டு சமையல் பொருட்களின் அரசனாக உள்ளது.
இவரது வெற்றிக்கான காரணம் பற்றி குறிப்பிடுகையில், “சவால்களை எதிர்கொள்வது தனக்குப் பிடிக்கும் என்றும் அதில் வெற்ற பிறகு கிடைக்கும் மகிழ்ச்சி வேறு எதிலும் கிடைக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 30 சதவீத வளர்ச்சியினை ஆச்சி மசாலா பெற்றுள்ளதாகவும் தேசிய அளவில் 15 சதவீத சந்தையினைத் தன் வசம் வைத்துள்ளதாகவும், 4,000 ஏஜெண்டுகள், 12 லட்சம் சில்லறை வணிகர்கள் ஆதரவுடன் 1,200 கோடி ரூபாய் வரை வர்த்தகம் செய்து வருகிறது ஆச்சி நிறுவனம்.