திருப்பத்தூர் நகரத்தின் மிக முக்கிய அரசு அலுவலக வளாகப் பகுதியான டிஎஸ்பி அலுவலகம், நகராட்சி அலுவலகம் மற்றும் வீரபத்திர முதலியார் பூங்கா அமைந்துள்ள பகுதியில், அதிகாலையில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் 23 வயது போதை ஆசாமியால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒட்டுமொத்த மாவட்டத்தையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. அன்றாட பிழைப்புக்காக அதிகாலையில் வீட்டை விட்டு கிளம்பிய அந்தப் பெண், பூங்கா அருகே வழிமறிக்கப்பட்டு, பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்டு இந்த கொடூரத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரைத் தொடர்ந்து, கல்நார்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த சரத்குமார் என்ற இளைஞரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்தக் கொடூரம் நடந்த இடத்திற்கு மிக அருகில்தான், சில நாட்களுக்கு முன்புதான் பெண் வியாபாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்டு, அவரிடமிருந்த நகைகளும் பணமும் கொள்ளையடிக்கப்பட்டன. அந்த பரபரப்பும் அச்சமும் பொதுமக்களிடம் இருந்து விலகுவதற்குள்ளாகவே, வெறும் 200 மீட்டர் தொலைவில் இந்த பாலியல் வன்கொடுமை அரங்கேறியுள்ளது. எப்போதும் அதிகாரிகள் மற்றும் காவலர்களின் நடமாட்டம் இருக்க வேண்டிய, மாவட்டத்தின் மிக உயரிய பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கும் ஒரு பகுதியிலேயே அடுத்தடுத்து இத்தகைய வீரியமிக்க குற்றங்கள் நடப்பது பொதுமக்களிடையே பெரும் பாதுகாப்பற்ற சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
முந்தைய கொலைச் சம்பவம் நடந்தபோதே, அந்தப் பகுதியில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் இல்லாதது பெரும் குறையாக சுட்டிக்காட்டப்பட்டது. குற்றவாளிகளைக் கண்டறிவதில் போலீசாருக்குத் தொய்வு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் உடனடியாக கேமராக்களை பொருத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், காவல்துறை தரப்பில் இதுவரை அதற்கான எந்தவொரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படாததே, தற்போது இந்த இரண்டாவது குற்றமும் அதே துணிச்சலுடன் அரங்கேற முக்கியக் காரணமாக அமைந்துள்ளது என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பெண்களின் பாதுகாப்பிற்காகப் பிரத்யேகமாக “சிங்கப்பெண் அதிரடி படை” போன்ற அமைப்புகள் செயல்பாட்டில் இருந்தும், இத்தகைய மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் அதிகாலை நேரத்தில் கண்காணிப்பு ஏன் தவறியது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எனவே, இனியாவது காவல்துறை நிர்வாகம் விழித்துக் கொண்டு, போதை ஆசாமிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த இரவு மற்றும் அதிகாலை நேர ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். மேலும், அப்பகுதி முழுவதும் போர்க்கால அடிப்படையில் சிசிடிவி கண்காணிப்பை பலப்படுத்தி, பெண்களுக்குப் பாதுகாப்பான சூழலை உறுதி செய்ய வேண்டும் என்பதே திருப்பத்தூர் மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.
ஆபாசமாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், திமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான பொன்முடியைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த…
இபிஎஸ் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறும் முதியவர்கள், தங்களுக்கு வரும் மாதாந்திர ஓய்வூதியம் எவ்வித தடையுமின்றி தொடர்ந்து கிடைக்க ஒவ்வொரு…
குழந்தைகள் நல அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவர் பிரீதி காஷ்யப், தனது 40-வது வயதிலேயே எதிர்பாராதவிதமாக உயிரிழந்த சம்பவம் மருத்துவ…
இந்தியாவில் சர்க்கரையின் மொத்த விற்பனை விலை இதுவரை இல்லாத அளவிற்குக் கடுமையான உச்சத்தை எட்டியுள்ளது. வரவிருக்கும் பண்டிகைக் காலங்களில் இனிப்புத்…
தெலுங்கானா மாநிலம் லிங்கம்பள்ளி பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அருணா என்ற பெண்ணும் சிரவன் என்பவரும் முதன்முறையாகச் சந்தித்துப் பழகியுள்ளனர்.…
ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி நெஞ்சை பதறவைக்கும் கும்பல் தாக்குதல் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.…