CINEMA
ஒரே படத்தில் பல முன்னணி நடிகர்கள்… யார் பெயரை முதலில் போடுவது?- பிரச்சனையை எளிமையாக முடித்த இயக்குனர்!
தமிழ் சினிமாவின் புராதண சினிமா தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம். சுதந்திரத்துக்கு முன்பிருந்து சினிமா தயாரிப்பில் இந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. அவர்கள் தயாரிப்பில் ஏ பீம்சிங் இயக்கத்தில் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சரோஜா தேவி, சாவித்ரி மற்றும் கமல்ஹாசன்( குழந்தை நட்சத்திரமாக) என பலர் நடிப்பில் உருவான திரைப்படம் ‘பார்த்தால் பசி தீரும்’.
இந்த படம் 1962 ஆம் ஆண்டு ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தின் ரிலீஸின் போது ஒரு சிக்கல் எழுந்துள்ளது. படத்தில் நிறைய நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர். அனைவரும் சம அந்தஸ்து உள்ள நடிகர்கள் என்பதால் டைட்டில் கார்டில் யார் பெயரை முதலில் போடுவது என்ற சிக்கல் எழுந்துள்ளது.
அப்போது சாவித்திரியை விட சரோஜா தேவி புகழின் உச்சியில் இருந்தார். அதனால் அவர் பெயரை முதலில் போட்டு டைட்டில் கார்ட் தயார் செய்யப்பட்டுள்ளது. அதனால் அதிருப்தி அடைந்த சாவித்திரி “சரோஜா தேவியை விட நான்தான் சீனியர். அதனால் என் பெயர்தான் முதலில் வரவேண்டும்” எனக் கூறியுள்ளார். அதே போல ஜெமினி கணேசன் மற்றும் சிவாஜி ஆகிய இருவரில் யார் பெயரை முதலில் போடுவது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதனால் படக்குழுவினர் குழப்பத்தில் இருந்துள்ளனர். அப்போது படத்தின் இயக்குனர் பீம்சிங் ஒரு யோசனையைக் கூறியுள்ளார். தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் நிறுவனத்திடம் “சார் பேர் போட்டாதானே பிரச்சனை.. யார் பேரையும் போடவேணாம். ஒட்டுமொத்தமாக உங்கள் அபிமான நட்சத்திரங்கள் நடிக்கும் என ஒரே கார்டாக போட்டுவிடலாம். யாருக்கும் அதிருப்தி ஏற்படாது” எனக் கூறியுள்ளார்.
வேறு வழி இல்லாததால் அதையே ஏவிஎம் நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனாலும் இதில் சாவித்திரி முழு திருப்தி ஏற்படவில்லையாம். சென்னையை தவிர மற்ற பகுதிகளில் சரோஜா தேவியின் பெயரை முதலில் போட்டுவிட்டார்கள் எனக் கூறி அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.