CINEMA
124 வீடுகள் 1000 ஏக்கர் நிலம்.. கடைசியில் ஒன்றுமில்லாமல் 35 வயதில் இறந்து போன பிரபல நடிகர்..
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமாக இருந்தவர் அந்த நடிகர். சினிமாவில் தொழில்நுட்பம் வளராத அந்த காலகட்டத்திலேயே, அதாவது ஏறக்குறைய 70, 80 ஆண்டுகளுக்கு முன்பே இரட்டை வேடத்தில் நடித்தவர். கமல்ஹாசன் இப்போதுதான் தசாவதாரம் படத்தில் 10 வேடங்களில் நடித்தார். ஆனால் அந்த காலகட்டத்திலேயே இவர் 10 வேடங்களில் நடித்து, ரசிகர்களை கவர்ந்தவர். அன்றைய சூப்பர் ஸ்டாருக்கு போட்டியாக கருதப்பட்ட நடிகர், அவர்தான் பி.யு. சின்னப்பா. தந்தை பெயர் உலகநாதன், சொந்த ஊர் புதுக்கோட்டை என்பதால் பியு சின்னப்பா என அழைக்கப்பட்டார். முதலில் நாடகங்களில் நடித்து பெயர் பெற்ற இவர், பிறகு படங்களில் நடித்தார். பெரும்பாலும் அவரது நாடகங்களே படமாக்கப்பட்டன.
குஸ்தி, சிலம்பம், மல்யுத்தம் கற்ற நடிகரான இவர் அந்த காலகட்டத்தில் மிகப்பெரிய ஹிட் படங்களை கொடுத்தவர். தனக்கு கிடைத்த பெரும் வருவாயில் 124 வீடுகளை வாங்கி, பிறருக்கு தந்திருக்கிறார். மேலும் 1000 ஏக்கருக்கு மேற்பட்ட இடங்களை வாங்கி இருக்கிறார். இவர் இப்படி புதுக்கோட்டையில் நிலங்களை, வீடுகளை பியு சின்னப்பா வாங்கி குவித்ததால், அந்த புதுக்கோட்டை சமஸ்தானத்தை சேர்ந்த ராஜா, பியு சின்னப்பா இடம் கேட்டால் விற்க கூடாது என தடை விதித்தார். அந்தளவுக்கு அவர் செல்வாக்குடன் வாழ்ந்தவர்.
அவருக்கு 35 வயதான சமயத்தில், அதாவது 1951ல் என்எஸ் கிருஷ்ணன் நடித்த படத்தை நண்பர்களுடன் சென்று பார்த்த அவர், வீட்டில் அவர்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்திருக்கிறார். அப்போது திடீரென ரத்தவாந்தி எடுத்த பியு சின்னப்பா சில நிமிடங்களில் இறந்துவிட்டார். அந்த காலத்தில் மருத்துவ தொழில்நுட்பம் வளராத காலகட்டத்தில் அவர் ரத்தவாந்தி எடுத்து உடனடியாக இறக்க என்ன காரணம் என கண்டறிய முடியவில்லை. கரகாட்டக்காரன் படத்தில், காந்திமதியிடம் வம்பு பேசும் கறிக்கடைக்காரராக வரும் ராஜா பகதூர்தான் பியு சின்னப்பா மகன். அவரும் இறந்து விட்டார். அவரது மறைவுக்கு பிறகு பியு சின்னப்பா குடும்பம் சார்ந்தவர்கள் வறுமையில் உள்ளனர். புதுக்கோட்டையில் உள்ள அவரது நினைவிடமும் பராமரிப்பின்றி காட்சியளிக்கிறது. 1916 – 2016 என, பியு சின்னப்பா நூற்றாண்டு கொண்டாடிய நடிகர் சங்கம், அவரது நினைவிடத்தை புதுப்பித்து பராமரிக்க முன்வர வேண்டும்.