HISTORY
சென்னைக்கு முந்தைய பெயர் மெட்ராஸ்! ஆனால் மெட்ராஸுக்கு முன்னாடி என்ன பெயர் இருந்தது தெரியுமா? வாங்க பார்க்கலாம்
தமிழ்நாட்டின் தலைநகரமாகவும் இந்தியாவின் மிக முக்கியமான மெட்ரோபொலிடன் சிட்டியாகவும் விளங்குகிறது சென்னை மாநகரம். சென்னையை முதலில் “மெட்ராஸ்” என்றும் “மதராசப்பட்டினம்” என்றும் அழைத்து வந்தார்கள். அதன் பின்பு 1996 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக சென்னை என்று பெயர் மாற்றப்பட்டது.
தாமரல வெங்கடாபதி என்ற ஒருவர் விஜயநகரப் பேரரசின் பிரதிநிதியாக சென்னைப் பகுதியை ஆண்டுவந்தார். அப்போது சென்னைப் பகுதி மதராசப்பட்டினம் என்ற பெயரிலேயே இருந்தது. தாமரல வெங்கடாபதியின் தந்தையின் பெயர் சென்னப்ப நாயக்கர். அவரது நினைவாக தற்போதுள்ள சென்னையின் சில பகுதிகள் சென்னப்பட்டனம் என்று அப்போதே அழைக்கப்பட்டிருக்கிறது.
இந்த வரலாற்றை அடிப்படையாக வைத்துத்தான் மெட்ராஸ், சென்னை என்று பெயர் மாற்றம் பெற்றது. எனினும் மதராசப்பட்டினம் அல்லது மெட்ராஸ் போன்ற பெயர்கள் அழைக்கப்படுவதற்கு முன்பே இன்னொரு பெயரும் சென்னைக்கு இருந்திருக்கிறது.
1973 ஆம் ஆண்டு தமிழகத் தொல்லியல் துறையினரால் கிருஷ்ணகிரியில் விஜயநகரப் பேரரசு காலத்துக் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கல்வெட்டில் கிழக்குக் கடற்கரை துறைமுகப்பட்டினங்களை குறித்து பல நகரங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அதில் “மாதரசன் பட்டணம்” என்ற பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது. இந்த “மாதரசன் பட்டணம்”தான் அதன் பின் ஆங்கிலேயர்களால் மறுவி மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டதாக கூறுகிறார்கள். ஆக மாதரசப் பட்டணம் என்ற பெயர் மெட்ராஸ் ஆக மாறி அதன் பின் சென்னையாக மாறியிருக்கிறது.