இனி பி.எட்., படிப்பு கிடையாது. என்ன இந்த செய்தியைக் கேட்டவுடன் அதிர்ச்சியாக இருக்கிறதா? அப்போ இனி ஆசிரியர் படிப்புக்கு என்ன டிகிரி படிப்பது என்ற குழப்பமா? மத்திய அரசின் கல்வி நிறுவனம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பால் ஆடிப்போயுள்ளனர் வருங்கால ஆசிரியர் கனவில் இருக்கும் மாணவர்கள்.
அதாவது தேசிய கல்வி கொள்கை 2020-ன் படி, 4 வருட ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி திட்டத்தின் (4 Years Integrated Teacher Education programe) மூலமாக மட்டுமே 2023-24ம் ஆண்டில் இருந்து ஆசிரியர் கல்வி இருக்கும் என்று இந்திய மறுவாழ்வு கவுன்சில் (Rehabilitation Council of India (RCI)) தெரிவித்துள்ளது. அதாவது இனி 2 ஆண்டு பி.எட். படிப்பு என்பது கிடையாது. அதற்குப் பதிலாக 4 வருடங்கள் ஒரே கோர்ஸாக படிக்கும் முறையைக் கொண்டு வந்துள்ளது இந்த அமைப்பு.
தோல்வி மேல் தோல்வியா இவர் கதையைக் கொஞ்சம் கேளுங்க.. தன்னம்பிக்கை ஆறாய் பெருக்கெடுத்து ஓடும்
RCI என்ற இந்த அமைப்பானது பாராளுமன்றத்தின் சட்டத்தால் நிறுவப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும். கல்வியில் முன்னேற்றங்கள் மற்றும் கல்வி தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்வது இதன் முக்கிய செயல்பாடாகும். மேலும் மாற்றுத் திறன் படைத்தவர்களுக்கான கல்வி மற்றும் பயிற்சிக்கான குறைந்தபட்ச தரங்களையும் இந்த கவுன்சில் பரிந்துரைக்கிறது.
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் சிறப்பு பி எட் படிப்பை முடித்திருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. தற்போது பி.எட் படிப்புகளை பொறுத்தவரை இரண்டு ஆண்டுகள் என பின்பற்றப்பட்டு வந்த நிலையில் RCI -ன் புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் பி.எட் படிப்புகள் நான்காண்டுகள் முடிக்க வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் சிறப்பு பி.எட் படிப்புகளை நடத்தும் கல்வி நிறுவனங்கள் இனி நான்காண்டு பிஎட் படிப்புகளை மட்டுமே நடத்த வேண்டும் என்றும் இரண்டு ஆண்டு பிஎட் படிப்புகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட மாட்டாது என்றும் தெரிவித்துள்ளது.
இதனால் மாணவர்கள் பலர் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இரண்டாண்டு படிப்பு போய் தற்போது பொறியியல் மருத்துவம் போன்று ஆசிரியர் படிப்பும் மாறியதால் ஆசிரியர் படிப்புக்கு இனி எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.