HISTORY
ஆகஸ்ட் 15 நல்ல நாள் இல்லை…! சுதந்திர தினத்திற்கு எதிராக போராடிய ஜோதிடர்கள்.. இப்படி எல்லாம் நடந்துருக்கா?
1947 ஆம் ஆண்டு ஆகஸ்து மாதம் 15 ஆம் தேதி இந்தியா சுதந்திரம் பெற்று தனது சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கியது. பிரிட்டிஷாரின் சுரண்டல் நிறைந்த கொடுங்கோல் ஆட்சியிலிருந்து விடுபட்டு இந்தியா ஜனநாயகத்தின் வழியை தேர்ந்தெடுத்து பயணிக்கத் தொடங்கியது.
இந்தியாவின் முதல் பிரதம மந்திரியாக இருந்த ஜவஹர்லால் நேரு, நள்ளிரவில் இந்தியா சுதந்திரம் பெற்றுவிட்டதாக உலக மக்களுக்கு அறிவித்தார். ஆகஸ்து 15 ஆம் தேதி அன்று பிரிட்டிஷார் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்க முடிவு செய்ததற்கான பின்னணியில் ஒரு காரணம் இருப்பதாக கூறப்படுகிறது.
அதாவது இரண்டாம் உலகப் போர் சமயத்தில் 1945 ஆம் ஆண்டு ஆகஸ்து 15 ஆம் தேதி ஜப்பானின் 50 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர்கள் கிழக்கு ஆசிய கடற்படை தளபதியாக இருந்த மவுன்ட்பேட்டனிடம் சரணடைந்தனர். இந்த நாள் மவுன்ட்பேட்டன் வாழ்வில் ஒரு சிறப்பு மிக்க நாள் என்று கூறப்படுகிறது. ஆதலால்தான் ஆகஸ்து 15 ஆம் தேதி இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்க முடிவு செய்யப்பட்டதாக ஒரு வரலாறு உண்டு.
ஆனால் ஆகஸ்து 15 ஆம் தேதி அஷ்டமி என்பதால் அந்த நாளில் சுதந்திரம் பெறக்கூடாது என்று அந்த சமயத்தில் வாழ்ந்து வந்த ஜோசியர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனராம். மேலும் ஜோசியத்தை நம்பிய பலரும் ஆர்ப்பாட்டம் கூட செய்தார்களாம். ஆனால் ஜவஹர்லால் நேருவுக்கு ஜோசியத்தின் மீது நம்பிக்கை இல்லை. ஆதலால் ஜவஹர்லால் நேரு ஆகஸ்து மாதம் 15 ஆம் தேதி இந்திய சுதந்திரத்தை அறிவித்தார்.