HISTORY
அன்று சைக்கிளில் சென்று துணி விற்பனை.. இன்று மலைக்க வைக்கும் 3000 கோடி வர்த்தகம்.. போத்தீஸ் வரலாறு..
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் சாதிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளுணர்வு உறுத்திக் கொண்டே தான் இருக்கும். ஆனால் என்னதான் நாம் உழைத்தாலும் அதற்குரிய நேரம், காலம் எல்லாம் வரும் போது பட்டஅத்தனை கஷ்டங்களுக்கும் மொத்தமாய் விடிவு பிறந்து தலையெழுத்தே மாறிவிடும். அப்படி தனது உடலை வருத்தி தெருதெருவாக சைக்கிளில் ஜவுளி விற்றவர் பின்னால் ஒரு சாம்ராஜ்யத்தையே நிறுவி விட்டுச் சென்றிருக்கிறார் போத்தி மூப்பனார்.
சாதாரண ஏழை நெசவு தொழில் செய்த K.V. போத்தி மூப்பனார் அவர்கள் சுமார் 1946 ஆம் ஆண்டு முதல் சைக்கிளில் தெருத்தெருவாக ஜவுளி வியாபாரம் செய்தவர். தனது சொந்த ஊரான ஸ்ரீ வில்லிப்புத்தூரில் போத்தி மூப்பனார் சன் அன் கோ என்ற பெயரில் தனது ஜவுளித் தொழிலை ஆரம்பித்தார். அவரின் ஒரே மகன் சடையாண்டியை சிறு வயது முதலே ஜவுளித்துறையில் ஈடுபாடு ஏற்படும் படி சொல்லி, சொல்லியே வளர்த்தனர் அப்பா KV.போத்தி மூப்பனாரும், அம்மா குருவம்மாளும்.
பத்தாம் வகுப்பு வரை படித்த சடையாண்டி அதன்பின் முழுநேரமாக கடையைப் பார்த்துக் கொள்ள ஆரம்பித்தார். இந்நிலையில் அதில் வருமானம் குறைவாக வரவே உரக்கடை ஆரம்பித்து அதை நடத்தி வந்தார். பின் பைனான்ஸ் கொடுத்து வந்தார். இந்த 3 தொழில்களையும் கவனித்து வந்த சடையாண்டி பின்னர் ஒரு கட்டத்தில் உரக்கடை, பைனான்ஸ் இரண்டையும் மூடிவிட்டு துணிக்கடையில் மீண்டும் தன் கவனத்தைத் திருப்புகிறார். அதே நேரத்தில் சடையாண்டியின் மகன் ரமேஷ் கல்லூரிப் படிப்பை முடிக்க
தன் தந்தைக்கு உதவியாக ஜவுளிக் கடைக்கு வந்தார்.
வந்தவுடன் சில அதிரடி மாற்றங்களைச் செய்த ரமேஷ் தங்களது நிறுவனத்தின் பெயரை போத்தீஸ் என மாற்றி திருவில்லிப்புத்தூரில் பெரிய கடையாக ஆரம்பித்தார். மேலும் அப்போது பலரும் சென்னை வந்து தொழில் தொடங்கிய நிலையில் ரமேஷூம் தங்களது கிளையை சென்னை தி.நகர் உஸ்மான் ரோட்டில் ஆரம்பித்தனர்.தங்களது கடின உழைப்பால் மளமளவென வளரத் தொடங்கினர்.
அதன்பின் மதுரை, திருநெல்வேலி, கோவை என பல கிளைகளை ஆரம்பிக்க இவர்களது சகோதரர்கள் ஆளுக்கு ஒரு கிளையை கவனிக்கத் தொடங்கினர். ஒருவர் மட்டும் மருத்துவரானார்.
ஒரு நாளைக்கு வெறும் 50 ரூபாயில் ஆரம்பித்த இவர்களது வர்த்தகம் இன்று வாயைப் பிளக்கும் வகையில் வருடத்திற்கு 3000 கோடி வரை வர்த்தகம் செய்ய ஆரம்பித்திருக்கிறது. மேலும் உலகநாயகன் கமல்ஹாசன் முதல் நயன்தாரா வரை போத்தீஸ்-ன் விளம்பரங்களில் நடிக்க நிறுவனம் மேலும் வளர ஆரம்பித்தது.
அதுமட்டுமன்றி வாடிக்கையாளர்களுக்கு தரமான ஆடைகளை வழங்கியும், போத்திஸ் ஒரிஜினல் பட்டும் தாயரித்து விற்பனை செய்ய ஆரம்பித்தனர். மேலும் கின்னஸ் சாதனைக்காக கடந்த 2005-ல் உலகின் மிக நீளமான பட்டுப்புடவையைத் தயாரித்து (1276 அடி) பட்டு விற்பனையிலும் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து சாதனை படைத்தது. மேலும் பிரபல துணி நிறுவனமான OTTO இவர்களது சொந்த தயாரிப்பு என்பது பலரும் அறியாத தகவல்.