CINEMA
சட்டசபையில் நாக்கை துருத்தி காட்டி ஆவேசப்பட்ட விஜயகாந்த் – அன்று இரவு விஜயகாந்துக்கு வந்த போனில் பேசிய நபர்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த விஜயகாந்த், தென்னிந்திய நடிகர் சங்க தலைவராகவும் பணியாற்றினார். தொடர்ந்து கடந்த 2005ம் ஆண்டில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற அரசியல் கட்சியை துவக்கினார். 2006ம் ஆண்டிலேயே மிக அதிகமாக ஓட்டுகளை பெற்று, மக்கள் செல்வாக்கும், ஆதரவும் தனக்கு அமோகமாக இருப்பதை வெளிப்படுத்தினார். தொடர்ந்து 2011ம் ஆண்டில் நடந்த சட்டசபை தேர்தலில் திமுகவை விட அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று, ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த சட்டசபையில் எதிர்கட்சி தலைவராக அமர்ந்தார். இந்த சூழலில், தமிழக அரசியல் வரலாற்றில் விஜயகாந்துக்கு ஏறுமுகமாக இருந்தது.
தொடர்ந்து சட்டசபை விவாதங்களில் பங்கேற்ற போது, ஒரு நாள் அதிமுகவுக்கும், தேமுதிகவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதிமுக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், தேமுதிக எம்எல்ஏக்களை பார்த்து கூச்சலிட்டனர். கடுமையாக விமர்சித்து பேச, அவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக விஜயகாந்தும் சட்டசபையில் எழுந்து நின்று ஆவேசமாக பேசினார். அப்போது நாக்கை துருத்தி காட்டி, அவர் மிரட்டும் தொனியில் பேசியது பலத்த பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பத்திரிகையாளர் அந்தணன் கூறியதாவது, ஒருமுறை விஜயகாந்தின் நீண்ட நாளைய நண்பர் நடிகர் ராதாரவியிடம் நான் பேசிக்கொண்டு இருந்தேன். அப்போது இந்த விஷயம் பற்றி குறிப்பிட்ட ராதாரவி, எதிர்வரிசையில் நான் அமர்ந்திருக்கிறேன். அப்போது விஜி (விஜயகாந்த்) இப்படி நாக்கை துருத்தி காட்டி பேசியதை பார்த்து அதிர்ந்து போய்விட்டேன். அய்யய்யோ, தப்பு பண்ணிட்டானே என்று பதறிப் போய்விட்டேன். அன்று இரவு அவனுக்கு போன் செய்து பேசினேன்.
அப்போது விஜயகாந்த், நான் அம்மா(ஜெயலலிதா)வை பார்த்து கோபப்பட்டு அப்படி செய்யவில்லை. அவருக்கு பின்னால் இருந்தவர்களை பார்த்துதான் அப்படி செய்தேன், என்று கூறினான் என்று ராதாரவி என்னிடம் தெரிவித்தார். விஜயகாந்தின் அந்த செயல், அதிமுக தேமுதிக முறிவுக்கு முக்கிய காரணமானது. அப்படி நடக்காமல் இருந்திருந்தால் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுக தேமுதிக ஒன்றாக கூட மாறியிருக்கலாம். அரசியலில் போக்கே வேறு மாதிரி இருந்திருக்கும், என்று அந்தணன் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.