மிக்ஜாம் புயல் சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தை வெளுத்துச் சென்ற நிலையில், எங்கு பார்த்தாலும் தண்ணீராக காட்சியளிக்கிறது. குறிப்பாக, சென்னை வெள்ளத்தில் மூழ்கி தீவு போல மாறிவிட்டது. இதனிடையே, வேளச்சேரி, ஆதம்பாக்கம், அடையாறு, வடபழனி, ராயப்பேட்டை, ஊரப்பாக்கம், பெருங்குடி, சோழிங்கநல்லூர் என பல பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மழை நீர் புகுந்துவிட்டது.
இதையடுத்து, அவர்களை மீட்பதற்காக தீயணைப்புப் படையினரும், பேரிடர் மீட்புப் படையினரும் களத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளனர். இதுதவிர, மாநகராட்சி ஊழியர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இருந்தபோதிலும், தாங்கள் இரவு முதல் கழுத்தளவு மழை நீரில் வீட்டிற்குள் இருப்பதாகவும், பல முறை தொடர்பு கொண்ட போதிலும் இன்னும் யாரும் தங்களை மீட்க வரவில்லை என பொதுமக்கள் பலரும் வேதனை தெரிவித்தும் வருகின்றனர்.
இந்நிலையில் தீயணைப்புப் படையினரும், பேரிடர் மீட்புப் படையினரும் தாம்பரம் பகுதியில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த மக்களை மீட்கும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அவர்களின் இந்த செயலை மனதார பாராட்டி வருகின்றனர். இதேபோல வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் பல்வேறு தரப்பு மக்களையும் காப்பாற்றும்படி கோரிக்கை வைத்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…