CINEMA
37 வயதில் இறந்து போன பாடகி ஸ்வர்ணலதா.. தமிழ் சினிமாவின் இசைக் குயில் மறைவுக்கு இந்த நோய் தான் காரணமா..?
தமிழ் சினிமாவில் கடந்த 1980-90களில் முன்னணி பாடகியாக இருந்தவர் ஸ்வர்ணலதா. ஆட்டமா தேரோட்டமா, போவோமா ஊர்கோலம், குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே, ராக்கம்மா கைய தட்டு என பல ஹிட் பாடல்களை தந்தவர் ஸ்வர்ணலதா. இதில் போறாளே பொன்னுத்தாயி என்ற பாடலுக்கு தேசிய விருது பெற்றவர் ஸ்வர்ணலதா. 14 வயதில் மேடைகளில் பாடத் துவங்கிய ஸ்வர்ணலதா, 37 வயதில் இந்த மண்ணை விட்டு மறைந்து போனார். கேரளா பாலக்காடு பகுதியில், இசைக்குடும்பத்தை சேர்ந்த ஸ்வர்ணலதா, சிறுவயதில் இருந்தே இசையில் நாட்டம் கொண்டவர். 1987ம் ஆண்டில், தனது 14வது வயதில் மேடை கச்சேரிகளில் பாடல்களை பாடி ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.
தமிழ் சினிமாவில், எம்எஸ் விஸ்வநாதன் இசையில், நீதிக்கு தண்டனை என்ற படத்தில், பாரதியாரின் சின்னஞ்சிறு கிளியே என்ற பாடலை, கேஜே ஜேசுதாஸ் உடன் சேர்ந்து பாடி, தன் திரையுலக பயணத்தை துவங்கினார். இளையராஜா இசையில், குரு சிஷ்யன் படத்தில் பாடினார். தொடர்ந்து, என் ராசாவின் மனசிலே இடம்பெற்ற குயில்பாட்டு ஓ வந்ததென்ன இளமானே, பாடலும், சின்னதம்பியில் இடம்பெற்ற போவோமா ஊர்கோலம் பாடலும் ஸ்வர்ணலதாவை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. எம்எஸ்வி, இளையராஜா, ஏஆர் ரகுமான் என மூன்று இசையமைப்பாளர்களின் பல ஆயிரம் பாடல்களை பாடினார்.
தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்பட பல மொழிகளில் பாடிய பாடகி ஸ்வர்ணலதா, தனிமை விரும்பியாக இருந்தார். அதனால் திருமணமே செய்துக்கொள்ளவில்லை. கடந்த 2008ம் ஆண்டில் பீமா படத்தில் ரங்கூன் ரங்கம்மா பாடல்தான் ஸ்வர்ணலதா பாடிய கடைசி பாடல். அதற்கு பிறகு, அவர் பாடவில்லை. அதுவரை 7 ஆயிரம் பாடல்கள் வரை பாடியிருந்த ஸ்வர்ணலதா, நுரையீரல் பாதிப்பு காரணமாக பாடுவதை நிறுத்திக்கொண்டார். தொடர்ந்து நுரையீரல் பாதிப்பு அதிகரித்து உடல் நலம் பாதிக்கப்பட்ட ஸ்வர்ணலதா, 2010ம் ஆண்டில் தனது 37வது வயதில் இந்த மண்ணை விட்டு மறைந்தார். உண்மையில், ஸ்வர்ணலதா இசைக்குயிலாக வாழ்ந்து மறைந்தது, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பெரிய இழப்பாக இன்று வரை நீடிக்கிறது.