CINEMA
முதல் நாள் நடிக்க போகும்போது பிரபு செஞ்ச காரியம்.. மகனின் செயலை பார்த்து ஆடிப்போன தந்தை சிவாஜி கணேசன்..
நெப்போட்டிசம் என்ற வார்த்தை இன்றைய நவீன சினிமா உலகில் மிகவும் பிரபலமான ஒன்றாக மாறிவிட்டது. இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்தாலும், பல எதிர்ப்புகளும் இருக்கத் தான் செய்கின்றன. ஆனால் இந்த நெப்போட்டிசம் என்பது இன்று நேற்று அல்ல, எம்.ஜி.ஆர் சிவாஜி காலத்திலேயே இருக்கும் விஷயம் தான். தமிழ் சினிமாவில் நடிப்பு பல்கலைகழகம் என்றாலே அது சிவாஜி கணேசன் தான். நடிகர் திலகம் என போற்றப்படும் சிவாஜி குடும்பத்தில் யாருமே சினிமாவில் இருக்கும் நபர்களை திருமணம் செய்து கொள்ளவில்லை.
அவருக்கு பிறகு அவரது மகன் பிரபு சினிமாவில் வருகிறார் எனக் கூறும் போது, அப்போதைய கோலிவுட்டில் சலசலப்பு ஏற்பட்டது. வெளிநாட்டில் படித்து பாலிஷாக வந்தவருக்கு தமிழ் சினிமா ஒத்து வருமா என்ற கேள்வி பலருக்கும் இருந்தது. பிரபுவை ஒரு போலீஸ் அதிகாரியாக ஆக்க வேண்டும் என நினைத்தாராம் நடிகர் திலகம் சிவாஜி. ஆனால் பிரபுவுக்கோ நடிகர் ஆக வேண்டும் என்பது தான் ஆசையாம். ஆனால் சிவாஜிக்கு அந்த ஆசை பிடிக்கவில்லையாம். ஆனால் திரையுலகம் அவரை விடவில்லை.
அமரகாவியம், சங்கிலி என அடுத்தடுத்த படங்களில் நடிக்க பிரபுவுக்கு வாய்ப்பு வந்ததாம். ஆனால் சிவாஜி அதனை தடுத்துக் கொண்டே இருந்துள்ளார். சிவாஜியிடம் பேசினால் இனி சரிபட்டு வராது என நினைத்த சி.வி.ராஜன், சிவாஜியின் தம்பி சண்முகத்திடம் பேசி சம்மதம் வாங்கியுள்ளார். முதல் படத்திலேயே சிவாஜியுடன் சண்டை போடும் படியான கதாபாத்திரம் பிரபுவுக்கு. ஆனாலும் பிரபு தைரியமாக நடிக்க, அப்படம் வெற்றி பெற்றதால், பிரபுவை சினிமாவில் நடிக்க ஒப்புக் கொண்டாராம் சிவாஜி. 80களில் பல படங்களில் நடித்த பிரபு 90களிலும் பல ஹிட் படங்களில் நடித்திருக்கிறார் பிரபு.
இவர் நடிப்பில் வெளிவந்த சின்னத்தம்பி அதிக நாட்கள் ஓடிய தமிழ் சினிமா படங்களில் ஒன்று. குஷ்புவுடன் இணைந்து பிரபு நடித்த பல படங்கள் ரசிகர்களுக்கு விருந்துதான். ஹீரோவாக 100 படங்களுக்கும் மேல் நடித்த பிரபு இப்போது குணச்சித்திர நடிகராக கலக்கி வருகிறார். சங்கிலி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தப் போது, வீட்டில் இருந்து பிரபுவும், சிவாஜியும் கிளம்பிய போது பிரபு அப்பாவிடம் சென்று நீங்கள் படப்பிடிப்புக்கு கிளம்புங்கள், நான் பிறகு வருகிறேன் என்றாராம். இருவரும் சேர்ந்து நடிக்க வேண்டிய காட்சிகள் தானே சேர்ந்தே போகலாம் என சிவாஜி கூற, இல்லை நீங்கள் செல்லுங்கள் எனக் கூறிவிட்டாராம் பிரபு.
அதன் பின் படப்பிடிப்பு தளத்திற்கு வந்த பிரபுவிடம் சிவாஜி எங்கே சென்றாய் எனக் கேட்க, பெரியப்பாவிடம் ஆசி வாங்க சென்றதாய் கூறியிருக்கிறார் பிரபு. அவர் பெரியப்பா எனக் கூறியது எம்.ஜிஆர்-ஐ. சிவாஜி, எம்.ஜி.ஆரை அண்ணன் என்று தான் அழைப்பாராம். சினிமாவில் முதன் முறையாக கால் எடுத்து வைக்கும் முன்னர் இருபெரும் ஜாம்பவான்களின் ஆசியோடு உள்ளே நுழைந்தவர் பிரபு.