CINEMA
சாவுக்கு வராமல், நினைவிடத்திற்கு வரிசைகட்டி வந்த கோலிவுட் டாப் நடிகர், நடிகைகள்.. காரணம் அந்த நிகழ்ச்சி தானா..?
நடிகர் விஜயகாந்த் கடந்த 28ம் தேதி காலமானார். 29ம் தேதி மாலை கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டார். ரஜினி, கமல், விஜய், குஷ்பு போன்ற நடிகர், நடிகையர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். அதிலும் குறிப்பாக ரஜினிகாந்த், தூத்துக்குடியில் வேட்டையன் படப்பிடிப்பில் இருந்த நிலையில், அதை ரத்து செய்துவிட்டு சென்னைக்கு வந்தார்.
விமான நிலையத்தில் இருந்து நேராக சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்த கேப்டன் உடலை நேரில் பார்த்து இறுதி அஞ்சலி செலுத்தினார். அதற்கு முந்தைய நாள் விஜய், அத்தனை கூட்டத்தையும் பொருட்படுத்தாமல் தேமுதிக அலுவலகத்தில் வந்து அஞ்சலி செலுத்தினார். தமிழக முதல்வர் ஸ்டாலின் சாலிகிராமத்தில் உள்ள கேப்டன் வீட்டில் வந்து விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தியது மட்டுமின்றி அடுத்த நாள் இறுதி சடங்கிலும் பங்கேற்று தனது பெருந்தன்மையை வெளிப்படுத்தினார்.
ஆனால் நடிகர்கள் சூர்யா, கார்த்தி, அருண்விஜய், விஷால், தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் போன்றவர்கள் வெளிநாடுகளில் இருப்பதால் இப்போதைக்கு வரமுடியாது என்று கூறிவிட்டனர். சூர்யா காரில் பயணித்தபடி வீடியோவில் அஞ்சலி தெரிவித்தார். அஜீத்குமார் தரப்பில் எந்த ரியாக்சனும் இல்லை. புத்தாண்டில் அவர் ஒரு ஓட்டலில் போட்ட குத்தாட்டம்தான் இணையத்தில் வைரலானது. பிரேமலதாவிடம் அவர் போனில் பேசி வருத்தம் தெரிவித்ததாக கூறியது, யாரோ கிளப்பிவிட்ட வதந்தி என்பதும் உறுதியாகிவிட்டது.
இந்நிலையில், நேற்றும் இன்றும் விஜயகாந்த் நினைவிடத்துக்கு வரும் நடிகர், நடிகையர் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. பலரும் வரிசை கட்டி வந்து கேப்டன் நினைவிடத்தில் கண்ணீர் சிந்தி கதறி அழுதனர். விஜயகாந்த் மறைந்த போது அவரது உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்த வராதவர்கள், இப்போது வரக்காரணம் இதுதான். இன்று மாலை தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர் சங்கம் சார்பில் கலைஞர் 100 விழா, சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.
அங்கு சென்றால், விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த வரவில்லை. கலைஞர் விழாவுக்கு செல்கிறார்களே என சோஷியல் மீடியாவில் பலரும் தங்களை விமர்சிப்பார்களே என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே, இன்று கேப்டன் நினைவிடத்தில் கும்பல், கும்பலாக வந்து தங்கள் வருத்தத்தை காட்டிவிட்டு, அதில் பலரும் நடித்துவிட்டுச் சென்றுள்ளனர். கருணாநிதி விழாவுக்கு செல்லும் வழியில், பலரும் கேப்டன் நினைவிடத்திலும் ஒரு அட்டனென்ஸை போட்டுவிட்டுச் சென்றனர் என்பதே கசப்பான உண்மை.