நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றவர்களுக்கு, உதவும் மனப்பான்மை அதிகம் கொண்டவர். யாருக்கு என்ன பிரச்னை என்றாலும், தானே தேடிப்போய் உதவும் குணம் கொண்டவர். சமீபத்தில் கேரளாவில் வெள்ளம் வந்த போது, நன்கொடையாக ஒரு கோடி ரூபாய் கொடுத்திருக்கிறார். இதுகுறித்து சமீபத்திய ஒரு நேர்காணலில் ராகவா லாரன்ஸ் கூறியதாவது, கேரளாவில் உள்ள சோட்டானிக்கரை அம்மன் கோவிலுக்கு நான் அடிக்கடி செல்வேன். அங்குள்ள இயற்கை எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால் அந்த ஊரே எனக்கு இறைவனின் இடமாக தோன்றும்.
மழை வெள்ளத்தால் அங்குள்ள கிராமங்களில் இருந்த வீடுகள் இடிந்து விழுந்திருப்பதை பார்த்த போது, மனதுக்கு கஷ்டமாக இருந்தது. நானும் அம்மாவும்தான் கேரளாவுக்கு சென்றோம். கேரளா முதல்வரை நேரில் பார்த்து ஒரு கோடி ரூபாய் நன்கொடை கொடுத்தோம். அப்போது, இந்த பணத்தில் எத்தனை வீடு வேண்டுமானாலும் கட்டிக்கொடுங்கள். ஆனால் அதில் ஒரு வீட்டை என் அம்மா கையால் திறக்க வேண்டும் என்று மட்டும் கேட்டுக்கொண்டேன்.
நான் நன்கொடையாக கேரளாவுக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்ததால் என் மனைவி என்னை திட்டினார். நன்கொடை செய்வதை தவறு சொல்லவில்லை. 25 லட்சம் ரூபாய் கூட தந்திருக்கலாம். ஒரு கோடி ரூபாய் தர வேண்டுமா, என கோபப்பட்டார். இந்த ஒரு கோடி ரூபாய் நம் வீட்டில் இருந்தால் அது பணமாக, அல்லது ஒரு நிலத்து பத்திரமாக, காகிதமாக இருந்திருக்கும். அல்லது நகையாக, காராக பொருளாக இருந்திருக்கும். ஆனால், இது பொருள் அல்ல. ஒரு உணர்வு ரீதியான உதவி. பொருள் அழிந்துவிடும். ஆனால் எப்போதும் அந்த உணர்வு எப்போதும் அழியாது என்று என் மனைவியிடம் கூறி சமாதானப்படுத்தினேன். அவரும் அதனால் திருப்தியடைந்தார் என்றார். இந்த நேர்காணலின் போது இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர் எஸ்ஜே சூர்யா உடனிருந்தனர்.