CINEMA
நம்ம படத்த கொன்னுட்டு.. பிற மொழி படத்தை கொண்டாடுறீங்க.. ஆதங்கத்தை கொட்டிய சமுத்திரக்கனி..!
தமிழ் சினிமாவில் நாடோடிகள் என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகி அதனை தொடர்ந்து பல நல்ல திரைப்படங்களை இயக்கியிருக்கின்றார் சமுத்திரக்கனி. நிமிர்ந்து நில், அப்பா உள்ளிட்ட திரைப்படங்கள் இவரது இயக்கத்தில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக நடிப்பில் ஆர்வம் செலுத்தி வந்த இவர் குணசித்திர கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பழமொழிகளில் நடிக்கும் வாய்ப்பு இவரை தேடி வருகின்றது. சினிமாவிற்குள் நுழைந்த ஆரம்ப காலத்தில் பல போராட்டங்களை சந்தித்த இவர் தற்போது சாதித்து இருக்கின்றார். இவரது நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் நல்ல பெயர் சொல்லும் கதாபாத்திரங்களாக அமைந்திருக்கின்றது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய சமுத்திரகனி சிறிய படங்களை எடுத்துவிட்டு அதனை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க மிகுந்த சிரமம் பட வேண்டியுள்ளது என்பதை கூறியிருந்தார்.
மேலும் அப்பா என்று ஒரு படம் எடுத்தேன். அது இதுவரை என்ன ஆனது என்பது குறித்த கணக்கே எனக்கு வரவில்லை. இப்படித்தான் இன்றைய சூழல் இருக்கின்றது. நாம் இன்றைய காலத்தில் பிறமொழி திரைப்படங்களை வரவேற்கிறோம். ஆனால் நம் மொழியில் எடுக்கப்படும் திரைப்படங்களை கொன்று விடுகிறோம். வருடத்திற்கு 300 சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் வெளி வருகின்றன. அதில் ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே வரவேற்பை பெறுகின்றது.
நீங்கள் சின்ன திரைப்படத்திற்கு வாய்ப்பு கொடுக்காமல் அதற்கு எந்தவிதமான சப்போட்டும் செய்யாமல் முடிவெடுக்கக்கூடிய இடத்தில் யார் வரவேண்டும், யார் போக வேண்டும் என்பதை தீர்மானிக்க ஒரு நாலு பேர் இருக்கிறார்கள். அந்த நாலு பேருக்கு இப்படத்தின் வலி தெரியாது, மதிப்பு தெரியாது. அவர்கள் அனைவரும் இப்படத்தை போட்டு அமுக்குவதால் தான் பிறமொழி படங்கள் முன்னணி வகுக்கின்றது. இது இதோடு நிற்கப்போவது கிடையாது.
அடுத்ததாக கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இருந்தும் படங்கள் வெளிவரும் நம்முடைய சிறிய பட்ஜெட் படங்களை கொன்றுவிட்டு பிற மொழி படங்களை தொடர்ந்து ஆதரித்து கொண்டு தான் இருக்கப் போகிறோம். அதுமட்டுமில்லாமல் ரீ ரிலீஸ் என்ற பெயரில் நம்ம படங்களையே கொண்டாடி வருகின்றோம். பிறந்த குழந்தையை கொன்று விட்டு வளர்ந்ததை தூக்கி வைத்து கொஞ்சுவது என்ன பிரயோஜனம் என்று கொந்தளித்து பேசியிருந்தார் சமுத்திரகனி.