CINEMA
தொண்டையில் 3 ஓட்டைகள்.. நடிகர் விஜயகாந்துக்கு அளிக்கப்படும் சிகிச்சை இதுதான்.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்..
தமிழ் சினிமாவில், துவக்கத்தில் புரட்சிக் கலைஞர் என்றும் ஒரு கட்டத்துக்கு பிறகு கேப்டன் என்றும் அழைக்கப்பட்டவர் விஜயகாந்த். கடந்த 1980, 90களில் சினிமாவில் அதிரடி ஹீரோவாக பல வெற்றிப்படங்களை தந்தவர், பிறகு தேமுதிக கட்சியை துவக்கி, அரசியலிலும் அதிரடி காட்டினார். கட்சி துவங்கியதை அடுத்து சந்தித்த முதல் தேர்தலிலேயே அதிக ஓட்டுகளை பெற்றார். 2வது சட்டசபை தேர்தலில் திமுகவை பின்னுக்கு தள்ளி, அதிமுக ஆட்சி காலத்தில் எதிர்கட்சி தலைவராக சட்டசபையில் அமர்ந்தார்.
ஆனால், சில ஆண்டுகளில் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்ட விஜயகாந்த், அரசியல் பணிகளில் இருந்தும் விலகிக்கொண்டார். முழுநேர ஓய்வில் அடிக்கடி டாக்டர்கள் பரிசோதனை செய்யும் நிலைக்கு ஆளானார். அவர் பேசுவது குறைந்துபோய், நினைவுத்திறனும் அடிக்கடி இல்லாமல் போனது. அதிலும் சமீப சில ஆண்டுகளாக அவர் யாருடைய துணையும் இல்லாமல் நிற்கவோ, நடக்கவோ முடியாது. பேசாமல், சைகைகள் மட்டுமே செய்கிறார். யாரை பார்த்தாலும் உடனடியாக அடையாளம் தெரிந்துக்கொள்ளும் அளவுக்கு அவரது நினைத்திறன் இல்லை.
இந்நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன், காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக, சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட விஜயகாந்துக்கு, ஐசியுவில் வைத்து வெண்டிலேட்டர் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முகத்தில் மாஸ்க் போட்டும், வாய் வழியாக குழாய் செருகியும் அவருக்கு முதலில் வெண்டிலேட்டர் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்ட நிலையில், இப்போதும் தொண்டையில் 3 துளைகள் போடப்பட்ட அதில் குழாய் சொருகி, டிரக்கியா ஸ்டரமியா என்ற முறையில் செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது.
வைரல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு, வைரஸ் பாதிப்பு நுரையீரலிலும் பரவி விட்டதாலும், ஆக்ஸிஜன் சக்தி குறைந்துவிட்டதாலும் இந்த முறையில் சிகிச்சை தரப்படுகிறது. இது நுரையீரலுக்கு ஆக்சிஜன் சக்தி தருவதுடன், நுரையீரலை சுவாசிக்கவும் செய்யும் என்று, டாக்டர்கள் கூறியுள்ளனர். இதுபோன்ற நெருக்கடியான நிலையில் விஜயகாந்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது அறிந்து, கேப்டன் ரசிகர்கள் பலத்த கவலையில் உள்ளனர்.