சினிமா பின்புலம் எதுவும் இல்லாமல், தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமான நடிகர் உதய்கிரண். அவர் நடித்த முதல் படம் சித்திரம். அதைத்தொடர்ந்து நுவ்வு நேனு, மனசந்த துல்வே உள்ளிட்ட படங்கள் பெரிய அளவில் ஹிட் படங்களாக அமைந்தன. தொடர்ந்து பட வாய்ப்புகள் குவியத் துவங்கியது. இந்த சூழலில் தமிழில் கே பாலசந்தர் இயக்கத்தில் பொய் என்ற படத்திலும் உதய் கிரண் நடித்தார். தொடர்ந்து வம்பு சண்டை, பெண் சிங்கம் படங்களிலும் உதய்கிரண் நடித்தார். தமிழ், தெலுங்கு சினிமாக்களில் அவர் மீது ரசிகர்கள் கவனம் அதிகமாக திரும்பியது. அதனால், தயாரிப்பாளர்களும் அவரை தேடி வரத்துவங்கினர்.
தெலுங்கு சினிமா உலகை பொருத்த வரை நான்கு குடும்பங்களும், அந்த நடிகர்களும், அவர்களின் வாரிசுகளும்தான் தெலுங்கு சினிமாவில் கோலோச்ச வேண்டும். எங்கிருந்தோ வந்த உதய் கிரண் ஸ்டார் நடிகராக உருவானது அந்த தெலுங்கு சினிமா பிரபலங்களின் குடும்பங்களுக்கு பிடிக்கவில்லை. அவரது வளர்ச்சியை தடுக்கவும், அவரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைக்கவும் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி, தனது மகளை உதய்கிரணுக்கு திருமணம் செய்து வைக்க முன்வந்தார். திருமண நிச்சயதார்த்தமும் நடந்தது. இந்த சூழலில் உதய்கிரணிடம் அவரது நலம் விரும்பிகள், சிரஞ்சீவி மருமகன் ஆகிவிட்டால் இனி தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து நடிக்க முடியாது. பெரிய ஸ்டாராக வளர விடமாட்டார்கள். கவுரவ பிரச்னையில் உன்னை அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க திருமணம் செய்து வைக்க முயற்சிக்கின்றனர் என தெள்ளத் தெளிவாக கூறிவிட்டனர்.
இதையடுத்து அந்த நிச்சயதார்த்ததை பிரேக் அப் செய்த உதய்கிரண், சிரஞ்சீவியின் மகளை மணக்க விருப்பமில்லை என்று கூறிவிட்டார்,. இதையடுத்து அவரது சினிமா வளர்ச்சி மளமள என சரியத் துவங்கியது. ஒரு கட்டத்தில் அட்வான்ஸ் கொடுத்த தயாரிப்பாளர்கள் எல்லாம் பணத்தை திருப்பி வாங்கிக் கொண்டனர். எந்த படத்திலும் நடிக்க உதய்கிரணுக்கு வாய்ப்பு தரவில்லை. அப்போது ஒரு தயாரிப்பாளர், பெரிய இடத்தில் இருந்து வந்த அழுத்தம் காரணமாக உங்களுக்கு பட வாய்ப்பை தர முடியவில்லை என வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். இந்த சூழ்நிலையில், உதய்கிரண் அம்மா இறந்துவிட, பயங்கரமான மன உளைச்சலில் தவித்த உதய்கிரணும் தூக்கு மாட்டிக்கொண்டு தற்கொலை செய்துக்கொண்டார். இந்த தற்கொலைக்கு காரணம், தெலுங்கு சினிமாவில் உள்ள சில பிரபல சினிமா குடும்பங்களின் தூண்டுதல் காரணம். ஒரு இளம் நடிகனின் வளர்ச்சி பிடிக்காமல் அவனது மறைவுக்கு அவர்கள்தான் முழுக்க முழுக்க காரணம் என சமீபத்திய நேர்காணல் ஒன்றில் சினிமா விமர்சகர் செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.