CINEMA
SP பாலசுப்ரமணியத்தை தனக்கு பாட வைத்த எம்ஜிஆர்… கோபத்தில் TM சௌந்தர்ராஜன் என்ன செய்தார் தெரியுமா..?
தமிழ் சினிமாவில் எம் ஜி ஆர் மற்றும் சிவாஜி என இருவரும் கோலோச்சிய 60 கள் மற்றும் 70 களில் முன்னணிப் பாடகராக வலம் வந்தவர் டி எம் சௌந்தர்ராஜன். இருவருக்குமே தன்னுடைய குரலை அவர்களுக்கு ஏற்றார்போல மாற்றி பாடும் வல்லமை பெற்றவர் டி எம் எஸ். அவர் பாடிய பல பாடல்கள் இன்றும் எவர்க்ரீன் ஹிட்ஸ்களாக கேட்கப்பட்டு வருகின்றன.
ஆனால் ஒரு கட்டத்தில் புதிய பாடகர்களின் வரவு மற்றும் எம் ஜி ஆரோடு ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சனை காரணமாக டி எம் எஸ் தன்னுடைய பாடும் வாய்ப்புகளை வெகுவாக இழந்தார். இளையராஜாவின் வருகைக்குப் பிறகு எஸ் பி பாலசுப்ரமண்யம் மற்றும் ஜேசுதாஸ் ஆகியோர் முன்னணி பாடகர்களாக உருவாகினர்.
இந்நிலையில் பல ஆண்டுகளாக தனக்கு டி எம் எஸ் தான் பாடவேண்டும் என உறுதியாக இருந்த எம்ஜிஆர், முதல் முறையாக எஸ் பி பாலசுப்ரமணியத்துக்கு தன்னுடைய ‘ஆயிரம் நிலவே வா’ பாடலை பாடும் வாய்ப்பை அளித்தார். அப்போது எம் ஜி ஆருக்கும் டி எம் எஸ்-க்கும் இடையே சிறு பிரச்சனை ஒன்று ஏற்பட்டிருந்த காலம் என்பதால் இந்த முடிவை எடுத்ததாக சொல்லப்படுகிறது.
இது டி எம் எஸ்-க்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் பின்னர் தன்னை ஒரு எம் ஜி ஆர் பாடலை பாட அழைத்த போது தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். அப்போது எம் ஜி ஆர் மற்றும் சிவாஜி ஆகியோருக்கு பாடுவதற்கு ஒரு பாடலுக்கு 500 ரூபாய் வாங்கிக் கொண்டிருந்தார் டி எம் எஸ். அப்போது ஒரு பாடலுக்கு பாடகர் ஒருவர் வாங்கும் அதிக சம்பளம் இதுவாகதான் இருந்தது.
இந்நிலையில் இப்போது பாட அழைத்த தயாரிப்பாளரிடம் “இதுவரை எம் ஜி ஆருக்கு நான் மட்டும்தான் பாடினேன் என்பதால் நீங்கள் கொடுத்த 500 ரூபாயை வாங்கிக் கொண்டேன். ஆனால் இப்போது புதிய பாடகர் ஒருவரும் வந்துவிட்டதால், எனக்கு 1500 ரூபாய் கொடுத்தால்தான் பாடுவேன்’ என தடாலடியாகக் கூறியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர் வேறு வழியில்லாமல் அவர் கேட்ட தொகையைக் கொடுத்துதான் பாடலை பதிவு செய்தாராம்.