CINEMA
இளையராஜா – வைரமுத்து 36 ஆண்டுகள் பிரிவுக்கு, அந்த பாடல்தான் காரணமா..? ஒரு கைக்குட்டை இத்தனை பிரச்னை பண்ணிருச்சே?
இளையராஜா இசையில் வைரமுத்து எழுதிய பாடல்கள் என்றால், தேனில் ஊறவைத்த பலாச்சுளைகளை போல, தித்திக்கும். முதல் மரியாதை போன்ற படத்தின் பாடல்கள் அப்படித்தான் தித்தித்தன. ஆனால், ஒரு பாடல் பதிவின் போது இருவருக்கும் ஏற்பட்ட மோதலில், அன்று முதல் இன்று வரை இளையராஜா இசையில் வைரமுத்துவும் எழுதுவதில்லை. வைரமுத்து வரிகளுக்கு இளையராஜாவும் இசைப்பதில்லை. கடந்த 36 ஆண்டுகளாக இவர்களது பிரிவால், அதிகம் பாதிக்கப்பட்டது, இழந்தது, கலைத்துறையில் ஏமாற்றம் அடைந்தது நல்ல இசையை விரும்பும், நல்ல கருத்தான பாடல்களை ரசிக்கும் ரசிகர்களும்தான்.
இளையராஜாவை விட்டு பிரிந்த பின், ஆறு ஆண்டுகள் சினிமா துறையில் பாடல்கள் எழுத வாய்ப்பின்றி காணாமல் போனார் வைரமுத்து. அப்போது, கே பாலசந்தருக்கும், இளையராஜாவுக்கும் ஏற்பட்ட பிணக்கில் உள்ளே வந்தார் கவிஞர் வைரமுத்து.
வானமே எல்லை., ரோஜா, அண்ணாமலை என 3 படங்களுக்கும் அவரே கவிஞர். ஒரு படத்துக்கு சந்திரபோஸ், ஒரு படத்துக்கு ஏஆர் ரகுமான், ஒரு படத்துக்கு தேவா என மூன்று இசையமைப்பாளர்களுக்கும் 3 விதமான படங்களுக்கு முத்து முத்தான பாடல்களை எழுதி மீண்டும் உச்சம் தொட்டார் வைரமுத்து. தொடர்ந்து, ஹிட் பாடல்களை கொடுத்த வைரமுத்துவுக்கு குவியத் துவங்கியது வாய்ப்புகள். இளையராஜாவை விட்டு பிரிந்தும், இப்போதும் பிஸியான கவிஞர்தான் வைரமுத்து.
இசை ஜாம்பவான் இளையராஜாவுக்கும், கவிதை ஜாம்பவான் வைரமுத்துவுக்கும் இடையில் ஏற்பட்டது சிறு உரசல்கள்தான், பின்னாளில் பூகம்பமாக மாறி இருக்கிறது. ஒரு படத்தின் மொத்த பாடல்களையும் நான்தான் எழுத வேண்டும். அப்போதுதான் கேசட்டுகளில் என் பெயரும், புகைப்படமும் இடம்பெறும் என ஆசைப்பட்டார் வைரமுத்து. சில நேரங்களில் கவிஞர் வாலியை ஒரு பாடல் எழுத வைத்து, பாடல்கள் வாலி, வைரமுத்து என கேசட்டில் மாற்றி இருக்கிறார் இளையராஜா.
அதே போல், வைரமுத்துவின் பாடல் வரிகளை அடிக்கடி மாற்றி, திருத்தவும் செய்திருக்கிறார். இசைபாடும் தென்றல் என்ற படத்தில், எந்தன் கைக்குட்டையை யார் எடுத்தது என வைரமுத்து எழுத, என்னய்யா உரைநடை மாதிரி எழுதியிருக்கே, என இளையராஜா வேறு எழுத அதில் ஏற்பட்ட மோதல்தான், இன்று வரை, இருவரையும் பிரித்தே வைத்திருக்கிறது.