CINEMA
ஒரே படம் ; 5 மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு சூப்பர்ஹிட் ஆன வரலாறு…. என்ன படம் தெரியுமா ?
பொதுவாக ஒரு மொழியில் ஒரு திரைப்படம் ஹிட் ஆகிறது என்றால் அதை பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்வார்கள். ஆனால் அது எல்லா மொழியிலும் ஹிட் ஆகாது. ஆனால் ஒரே கதை, அனைத்து மொழியிலும் சூப்பர் ஹிட் ஆகி வரலாறு படைத்தது குறித்து உங்களுக்கு தெரியுமா ? த்ரிஷ்யம் படத்தை நீங்கள் நினைத்தால் அது தவறு. அதற்கும் முன்பே வேறு ஒரு படம் இந்த சாதனையை செய்துள்ளது.
1993 ஆம் ஆண்டு இயக்குனர் பாசில் இயக்கத்தில் மோகன்லால், சோபனா, சுரேஷ் கோபி நடித்த படம் மணிசித்திரத்தாலு. குறைவான பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் யாரும் எதிர்பாராத அசுர வெற்றியை பெற்றது. தங்களுக்கு சொந்தமான பூர்வீக வீட்டில் ஒரு அறை பக்கம் மட்டும் போக கூடாது என பெரியவர்கள் சொல்ல, அதை தெரிந்துகொள்ள துணிந்து செல்கிறார் சோபனா. அங்கு நாகவள்ளி என்னும் நாட்டியக்காரி ராஜாவால் கொல்லப்பட்டாள் என்பதும், அவளது ஆத்மா அங்கு இருக்கும் கதையை தெரிந்து கொள்ளும் சோபனா துணிந்து அங்கு செல்கிறார்.
அதன்பின் வீட்டில் பல மாற்றங்கள், பேய் கதையா என அனைவரும் நினைக்கும் நேரத்தில் இது பேய் கதை அல்ல, ஸ்பிலிட் பெர்சனாலிட்டி என்பது தெரிய வருகிறது. அதாவது நாகவள்ளியின் மேல் பரிதாபப்படும் சோபனா தன்னை நாகவள்ளியாகவே நினைத்துக்கொண்டு அந்த அரசனை பழிவாங்க நினைக்கிறாள். இதிலிருந்து சுரேஷ் கோபியும், அவரது நண்பர் மோகன்லாலும் எப்படி அவளை காப்பாற்றி குணப்படுத்துகிறார்கள் என்பது தான் கதை. யாரும் எதிர்பாராத இந்த படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சோபனாவுக்கு தேசிய விருதும் கிடைத்தது.
இதை 2004 ஆம் ஆண்டு கன்னடத்தில் பி.வாசு இயக்கத்தில் விஷ்ணுவர்தன், சவுந்தர்யா, ரமேஷ் அரவிந்த் நடிப்பில் வெளியாகி அங்கும் சூப்பர்ஹிட் அடித்தது. அதன் பின் தமிழில் 2005 ஆம் ஆண்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ஜோதிகா, பிறப்பி நடிப்பில் வெளியாகி இதுவரை தமிழ் சினிமா காணாத வெற்றியை பெற்றது. கிட்டத்தட்ட 800 நாட்கள் தியேட்டரில் ஓடிய பெருமை சந்திரமுகி திரைப்படத்தையே சாரும்.
அதன்பின் 2005 ஆம் ஆண்டு பெங்காலி மொழியில் அங்கு சூப்பர்ஸ்டாராக இருந்த ப்ரசன்ஜித் சாட்டர்ஜீ, அணு சவுத்ரி நடிப்பில் வெளியாகி அங்கும் மிகப்பெரிய ஹிட் ஆனது. இறுதியாக 2007 ஆம் ஆண்டு இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் அக்ஷ்ய குமார், வித்யா பாலம் நடிப்பில் ஹிந்தியில் பூல் புலையா என்ற பெயரில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இப்படி ஒரே கதை 5 மொழியிலும் ஹிட் அடித்து அங்குள்ள சினிமாவை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்றது. இதுவரை எந்த ஒரு படமும் இந்த பெருமையை பெற்றதில்லை. த்ரிஷ்யம் வந்தாலும், அதற்கு ஒரு தளத்தை உருவாக்கி தந்தது என்னவோ மணிசித்திரத்தாலு தான்.