இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாநிலங்களிலும் அரசியல் பிரபலங்கள் வீடுகளில் வருமான வரித்துறையின் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் கட்டு கட்டாக பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும் ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து எம்பி ஆனவருமான தீரஜ்குமார் சாகுவுக்கு தொடர்புடைய பல இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகிறார்கள். இன்று தொடர்ந்து ஆறாவது நாளாக நடைபெற்று வரும் சோதனையில் அதிகாரிகள் ஆச்சரியப்படும் அளவிற்கு ரொக்கம் கண்டறியப்பட்டுள்ளது.
இதுவரை கண்டுபிடிக்கப்பட்டு இருக்கும் பணத்தை என்னும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. கடந்த புதன்கிழமை தொடங்கி இன்றுவரை ஒடிசா, மேற்குவங்கம் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். இதுவரை 220 கோடி ரூபாய் எண்ணப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள கரன்சி நோட்டுகளை எண்ணுவதற்கு கூடுதல் எந்திரங்களை அதிகாரிகள் கோரி உள்ளனர் . இதனைத் தவிர மேலும் பல இடங்களில் ரொக்கம் மற்றும் தங்கம் மறைத்து வைக்கப்பட்டு இருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.
இதற்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் பிரதமர் மோடி, மக்களிடமிருந்து ஊழல் மூலமாக கொள்ளையடிக்கப்பட்ட ஒவ்வொரு பைசாவும் மக்களிடம் திருப்பித் தரப்பட வேண்டும் என கூறியுள்ளார். காங்கிரஸ் தலைவர்கள் நேர்மையைப் பற்றிய பேச்சுகளை கேட்பதற்கு முன்பு மக்கள் கட்டு கட்டாக அடுக்கி வைத்திருக்கும் பணத்தை பார்க்க வேண்டும் எனவும் பிரதமர் கூறியுள்ளார். சுதந்திரத்திற்கு பிறகு ஒரு எம் பி யின் வீட்டிலிருந்து இவ்வளவு தொகை மீட்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை எனவும் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது.