CINEMA
4 கோடி நஷ்ட்டத்தை கண்டுக்காம, ஒன்னேகால் கோடிக்கு மல்லுக்கட்டும் சூர்யா.. விடாப்பிடியாக நிக்கும் துறை சிங்கம்..
கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்பிலிருந்து கோலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய பேசுப் பொருளாக மாறிய ஒரு நிகழ்வு என்றால் இயக்குநர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இடையே நடைபெற்று வரும் பேட்டிகள் தான். இதை விட இயக்குநர் அமீர் மற்றும் நடிகர் சூர்யா குடும்பத்திற்கு இடையேயான பிரச்னை என்று கூறினால் சரியாக இருக்கும். இந்த பிரச்னை இப்போது தொடங்கியது அல்ல, கிட்டத்தட்ட 17 வருடங்களாக நடந்து வருவது.
2007-ம் ஆண்டு நடிகர் சிவக்குமாரின் இரண்டாவது மகனும், நடிகர் சூர்யாவின் தம்பியுமான கார்த்தி சினிமாவில் அறிமுகமாக வேண்டும் என முடிவெடுத்தப் போது, அவரை பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார் அமீர். இப்படத்தின் தயாரிப்பாளராக ஞானவேல் ராஜா இருந்தார். நடிகர் சூர்யாவின் அப்போதைய தயாரிப்பு நிறுவனமாக அதிகாரப்பூர்வமாக இல்லாத ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மூலம் இப்படம் தயாரிக்கப்பட்டது. இப்படத்தின் போது அமீர் தவறான கணக்கு எழுதி பல கோடி ரூபாயை அவர் ஏமாற்றியதாக, ஞானவேல் பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தது தான் மீண்டும் இந்த பிரச்னையை தொடங்கியது.
இதில் அமீருக்கு ஆதரவாக சமுத்திரக்கனி, சசிகுமார், சுதா கொங்கரா என பலரும் ஆதரவு தெரிவித்த நிலையில், இப்பிரச்னையில் நேரடியாக சூர்யாவோ, கார்த்தியோ எவ்வித கருத்துகளையும் தெரிவிக்காதது தற்போதும் கோலிவுட் வட்டாரத்தில் பேசுப்பொருளாக வலம் வருகிறது. உண்மையில் இவர்களுக்குள் என்ன பிரச்னை இருந்தது என்பதை சுருக்கமாக பார்க்கலாம்..
பாலாவின் பட்டறையில் சூர்யா நந்தவாக பட்டை தீட்டப்பட்டபோது பக்கத்தில் இருந்து சூர்யாவிற்கு தோள் நின்றவர் இயக்குனர் அமீர். தொடர்ந்து சூர்யாவின் வெற்றிப் பயணம் மெருகேற சூர்யாவிற்கு மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தை இயக்கி தன்னை தமிழ் சினிமாவிற்குள் இயக்குனராக அறிமுகப்படுத்தியதோடு சூர்யாவிற்கான கமர்சியல் கதவுகளை இன்னும் ஒரு அடி இழுத்து திறந்து விட்டதில் அமீரின் பங்கு முக்கியமானது.
அமீர் மீது இருந்த நம்பிக்கையின் காரணமாக தனது தம்பியையும் சினிமாவிற்குள் அறிமுகப்படுத்துமாறு சூர்யா அமீரிடம் வேண்டுகோள் வைக்க, தனது சொந்த தயாரிப்பில் பருத்திவீரன் படத்தை இயக்கி, தயாரித்து முடிக்க, அதனை வாங்கி வெளியிட்டது ஸ்டூடியோ கிரீன் நிறுவனம். படம் வெற்றியடையும் பட்சத்தில், வெற்றிப் பணத்தில் ஒரு தொகை அமீருக்கு வழங்கப்படும் என பேசி முடிவெடுக்கப்படுகிறது. எதிர்பார்த்தப் படி படமும் வெற்றியடைகிறது.
ஆனால் பேசியப்படி, அமீருக்கான பணம் கிடைக்காத நிலையில் தயாரிப்பாளர் ஞானவேல் மற்றும் இயக்குநர் அமீருக்கு இடையே பிரச்னை ஏற்பட இதில், ஞானவேலுக்கு சூர்யா ஆதரவு தெரிவிக்க, பிரச்னை அமீர் – சூர்யாவுக்கு இடையே என ஆகிறது. நீதிமன்றம் வரை இந்தப் பிரச்னை செல்ல, பல தூதுகளை சூர்யா, கார்த்தி தரப்பில் இருந்து விடுத்தாலும் அமீர் அதனை பொருட்படுத்தாது எனக்கு சேர வேண்டிய தொகையான ரூ.1.25கோடியை கொடுத்தால் இப்பிரச்னையை முடித்துக் கொள்வதாக கூறி வருகிறார்.
ஆனாலும் சூர்யா தரப்பில் இருந்து இதற்கு உடன்படாமல் நிற்கின்றனர். இந்த நிலையில் தான், பாலாவுடன் மீண்டும் வணங்கான் படம் மூலம் இணைந்த சூர்யா, அவருடன் ஏற்பட்ட மனகசப்பால், அப்படத்திலிருந்து விலகினார். இப்படத்தை சூர்யாவின் அதிகாரப்பூர்வ தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தான் முதலில் தயாரித்தது. அதன் மூலம் அவருக்கு 4 கோடி ரூபாய் அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம். இப்படி 4 கோடியை விட்டுக் கொடுத்த சூர்யா அமீரின் பங்கான 1.25கோடியை கொடுத்துவிட்டால் 17 வருடங்களாக நீடித்து வரும் பிரச்னையை எப்போதோ முடிவுக்கு கொண்டு வந்து விடலாமே என்ற கேள்வி நிலவுகிறது.. ஆனால் அதற்கு ஈகோ விட்டுக் கொடுக்க வேண்டுமே?