CINEMA
‘அது வந்தா கூட சொல்ல தெரியாது.. என்னால நெனச்சி கூட பாக்க முடில’.. பேட்டியில் வேதனையை கொட்டிய மனைவி பிரேமலதா..
தமிழ் சினிமாவில் கேப்டன் என அழைக்கப்படும் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த், தேமுதிக தலைவராக இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் ஓய்வில் இருந்த விஜயகாந்த், சில வாரங்களுக்கு முன் மூச்சுத்திணறல் பாதிப்பு காரணமாக, சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வருகிறார். அவருக்கு தொண்டையில் துளையிட்டு வெண்டிலேட்டர் முறையில் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.
விஜயகாந்த் மனைவி பிரேமலதாவை டான்ஸ் மாஸ்டர் கலா நேர்காணலில் சந்தித்தார். அப்போது பிரேமலதா கூறியதாவது, என் கணவருக்கு இப்படி ஒரு நிலைமை வரும் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. அவரது நிலையை பார்த்து நான் ரொம்ப மனம் உடைந்து விட்டேன். அவருக்கு உடல் பாதிப்பு வந்தவுடனே அமெரிக்கா, லண்டன், சிங்கப்பூர், துபாய் என பல நாடுளுக்குச் சென்று சிகிச்சை பார்த்தேன். அவருக்கு தலைவலி, காய்ச்சல் வந்தால் கூட சொல்லத் தெரியாது. ஒரு மாதிரியா இருக்கு, உடம்பு டயர்டா இருக்கு என்றுதான் சொல்வார். உழைப்பும், அன்பும், பாசமும்தான் அவருக்கு தெரியும். அம்மா இல்லாமல் வளர்ந்தவர் என்பதால், என்னிடம் அம்மா போல தான் பாசம் காட்டி பழகுவார். நான் ஊட்டி விட்டால், மகிழ்ச்சியாக சாப்பிடுவார்.
இவரை போன்ற ஒரு கணவரை அடைந்ததை பெரிய பாக்கியமாக நினைக்கிறேன். ஒரு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரியை கல்யாணம் செய்திருந்தால் கூட எனக்கு இவ்வளவு சந்தோஷம் கிடைத்திருக்காது. அவர் ஒரு படத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக வருவார். ஒரு படத்தில் பெரிய போலீஸ் அதிகாரியாக வருவார். எப்போதும் மக்கள் மீது அன்பு கொண்டிருப்பார். ஷூட்டிங் முடிந்த பிறகு மணிக்கணக்கில் சிரமத்தை பொருட்படுத்தாமல் ரசிகர்களுக்கு போட்டோ எடுக்க போஸ் கொடுப்பார். நம்மை பார்க்க ரொம்ப தூரத்தில் இருந்து வந்திருப்பாங்க, ஏமாந்து திரும்பி போகக் கூடாது என்பார். மக்கள், மக்கள்தான் எப்பவும் ஓடுற மனிதர், இன்று இப்படி இருக்கிறார். ஆனால், நிச்சயம் மீண்டும் வருவார். அவர் செய்த தர்மங்கள் அவரை திரும்ப கொண்டுவந்துவிடும் என்று கூறியிருக்கிறார் பிரேமலதா விஜயகாந்த்.