CINEMA
மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதனோடு சேர்ந்து இத்தனை படங்களுக்கு இசையமைத்துள்ளாரா இளையராஜா?
தமிழ் சினிமாவில் மட்டுமில்லை, இந்திய மற்றும் சினிமாவிலேயே அதிக படங்களுக்கு இசையமைத்தவர் என்ற பெருமைக்குரியவர் இசைஞானி இளையராஜா. கிட்டத்தட்ட 1500 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனைப் படைததுள்ள அவர் இப்போது 82 வயதாகும் நிலையிலும் வெற்றிமாறன் மற்றும் தியாகராஜன் குமாரராஜா உள்ளிட்ட முன்னணி இயக்குனர்களின் படங்களுக்கு அவர் இசையமைத்து வருகிறார்.
1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படம் மூலமாக அறிமுகமான இளையராஜா அந்த படத்தில் பாடல்களில் கலக்கினாலும் பின்னணி இசையமைப்பதில் அடுத்த சில ஆண்டுகள் வரை தடுமாறினார். இதை அவரே சில நேர்காணல்களில் கூறியுள்ளார். பதினாறு வயதினிலே திரைப்படத்துக்கு பின்னரே தனக்கென ஒரு பாதையை உருவாக்கிக் கொண்டதாக கூறியிருக்கிறார்.
இளையராஜா தன்னுடைய கோபம் மற்றும் அனுகுமுறை காரணமாக தன்னோடு பணியாற்றிய இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் வேறு இசையமைப்பாளர்களை தேடி செல்லும் சூழ்நிலைக்கு ஆளாகியுள்ளார். ஆனால் அப்போதும் தன் ஞானசெருக்கோடுதான் அவர் திரைத்துறையில் இயங்கி வருகிறார்.
தன் சக போட்டியாளர்களின் பாடல்களைக் கூட கேட்க விரும்பாத இளையராஜா, தமிழ் சினிமாவில் தன் சீனியரான எம் எஸ் விஸ்வநாதன் மீது அளவற்ற மரியாதைக் கொண்டவர். அவரின் பல பாடல்களை சிலாகித்து அதில் இருந்து தான் படைப்பூக்கத்தை பெற்றுள்ளதாகக் கூறியுள்ளார்.
இந்நிலையில் இளையாராஜா எம் எஸ் விஸ்வநாதனோடு சேர்ந்து நான்கு படங்களுக்கு இணைந்து இசையமைத்துள்ளார் என்பது பலரும் அறியாத தகவல். முதல் முதலாக இருவரும் மோகன், ராதா நடித்த மெல்ல திறந்தது கதவு படத்தில் இணைந்து பணியாற்றினர். இந்த படத்துக்கு மெட்டுக்களை விஸ்வநாதன் உருவாக்க, இசைக்கோர்ப்பு மற்றும் ஆர்க்கெஸ்ட்ரா பணிகளை இளையராஜா மேற்கொண்டுள்ளார்.
அதன் பிறகு இருவரும் இணைந்து செந்தமிழ்ப் பாட்டு, விஸ்வ துளசி மற்றும் செந்தமிழ் செல்வன் ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். விஸ்வநாதன் தவிர்த்து தனது மகனான யுவன் ஷங்கர் ராஜாவோடு இணைந்து ஒரு படத்துக்கு இசையமைத்துள்ளார் இளையராஜா. அது போல அவர் இசையில் சில சூப்பர் ஹிட் பாடல்களையும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.