சூரியவம்சம் உள்ளிட்ட பல படங்களில் இயக்குநர் விக்கிரமனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் ராஜகுமாரன். ஒரு கட்டத்தில் இயக்குநராகும் முயற்சிகளில் ஈடுபட்டார். சரத்குமார், தேவயானி நடித்த சூரியவம்சம் படத்தை அடுத்து, நீ வருவாய் என படத்தின் கதையை எழுதியிருக்கிறார். இந்த படம் அஜீத்குமார், பார்த்திபன், தேவயானி நடிப்பில் பின்னர் வெளிவந்து பெரிய வெற்றியை பெற்றது.
நீ வருவாய் என படத்தின் வெற்றியை அடுத்து, சரத்குமார்,குஷ்பு, விக்ரம், தேவயானி நடிப்பில் ராஜகுமாரன் இயக்கிய படம்தான் விண்ணுக்கும், மண்ணுக்கும். ஆனால் இந்த படம் வெற்றி பெறவில்லை. ஆனால், ராஜகுமாரனின் காதல் வெற்றி பெற்றது. இதில் கதாநாயகியாக நடித்த தேவயானி, சினிமா ஸ்டராகவே வருவார். அவரை விக்ரம் காதலிப்பதுதான் படத்தின் கதை. இப்படி காதல் கதைகளாக சொல்லி சொல்லி தேவயானி மனதில் காதலை வளர்த்த ராஜகுமாரனே, ஒரு கட்டத்தில் அவரது காதலராகி போனார்.
தேவயானியை எப்போதும் மேடம், மேடம் என்றே ராஜகுமாரன் அழைத்தார். சரத்குமார், விக்ரம் போன்றவர் காத்திருந்த நிலையில் தேவயானி போர்ஷனை எடுத்து, அவருக்கு முக்கியத்துவம் கொடுத்தவர் ராஜகுமாரன். இது படப்பிடிப்பு தளத்திலேயே பிரச்னையாக வெடித்திருக்கிறது. தமிழ் சினிமாவில் உச்சக்கட்ட மார்க்கெட்டில் இருந்த தேவயானி, ராஜகுமாரனை விரும்பியதை பெற்றோர் ஏற்றுக்கொள்ளாத நிலையில் அவர் கேட்டை தாண்டி குதித்துச் சென்று திடீர் திருமணம் செய்து கொண்டது அன்றைய காலகட்டத்தில் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நடிகர் சிங்கமுத்து, திருமணத்துக்கு சாட்சி கையெழுத்திட்டுள்ளார். திருமணம் முடிந்ததும் விக்ரமன் வீட்டுக்கு சென்ற மணமக்களை, அங்கு வந்த தேவயானியின் அம்மா கண்டபடி திட்டி, கேவலமாக பேசி இருக்கிறார். அதற்கு பிறகும் சூரியவம்சம் ஜோடியை போல, தங்கள் நிஜக்காதலில் ஜெயித்து இன்றுவரை நிமிர்ந்து நிற்கின்றனர் தேவயானி, ராஜகுமாரன். இன்றும் தன் மனைவியை அதே காதலோடு மேடம் என்றுதான் சொல்கிறார் ராஜகுமாரன்.