கரூர் மாவட்டத்தில் உள்ள கோயில் நில விவகாரத்தில், தமிழக அரசு தனியாருக்குப் பட்டா வழங்க முயல்வதாக பா.ஜ.க தலைவர்கள் நயினார் நாகேந்திரன் மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோர் குற்றம் சாட்டியிருந்தனர். இதற்கு, மயிலாடுதுறையில் செய்தியாளர்களைச் சந்தித்த சிபிஐ(எம்) கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சாமி.நடராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பா.ஜ.க தலைவர்களின் இந்த வாதம் முற்றிலும் அரசியல் லாபத்திற்கான பொய் பிரசாரம் என்று அவர் சாடியுள்ளார்.
இந்த நில விவகாரத்தின் பின்னணி குறித்து விளக்கிய சாமி.நடராஜன், கரூர் மாவட்டத்தில் 4 கோயில்களைச் சுற்றியுள்ள 15 கிராமங்களில் உள்ள 3,084 ஏக்கர் நிலங்கள் தொடர்பாக கடந்த 1963-ஆம் ஆண்டே அன்றைய தமிழக அரசு இனாம் ஒழிப்பு சட்டத்தின் கீழ் ரயத்துவாரி பட்டா வழங்கியுள்ளது என்றார். இதன் மூலம் அங்கு சாகுபடி செய்து வந்த மற்றும் குடியிருந்த 3,330 விவசாயிகள் நில உடைமையாளர்களாக மாற்றப்பட்டனர். மேலும், இந்த நிலங்களை பத்திரப்பதிவு செய்ய எவ்வித தடையும் இல்லை என கடந்த ஜூலை 9-ஆம் தேதியன்று இந்து சமய அறநிலையத்துறையும் கடிதம் வழங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், குறிப்பிட்ட இந்த இடங்களில் பல தலைமுறைகளாகச் சுமார் 10,000 இந்து குடும்பத்தினர் குடியிருந்தும், விவசாயம் செய்தும் வருகிறார்கள் என்றும், எந்தவொரு அரசு ஆவணத்திலும் இது கோயில் இடம் என்று பதிவு செய்யப்படவில்லை என்றும் கூறினார். ஆனால், சிலர் தொடர்ந்த பொதுநல வழக்கைக் காட்டி, இந்த நிலங்களை பத்திரப்பதிவு அலுவலகத்தில் ‘ஜீரோ மதிப்பீடு’ செய்து விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நிலைமை இவ்வாறு இருக்க, தமிழக அரசு கோயில் நிலங்களை தனியாருக்கு பட்டா வழங்கப்போவதாக பா.ஜ.க தலைவர்கள் உண்மைக்கு புறம்பாகப் பேசுவது கண்டனத்திற்குரியது என்றார்.
மறுபுறம், காவிரி நதிநீர் பிரச்னை குறித்தும் தனது கருத்துக்களை சாமி.நடராஜன் பகிர்ந்து கொண்டார். காவிரி ஆற்றில் புதிய அணை கட்டுவதற்கோ, தண்ணீரைத் திசை திருப்புவதற்கோ கர்நாடக அரசுக்கு எவ்வித சட்டப்பூர்வ உரிமையும் இல்லை என 2018-ஆம் ஆண்டே உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை நினைவு கூர்ந்தார். எனவே, அரசியல் காரணங்களுக்காக மேகதாதுவில் அணை கட்ட முற்படும் கர்நாடக அரசின் செயலை எதிர்கொள்ள, தமிழக முதலமைச்சர் உடனடியாக அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்களின் கூட்டத்தைக் கூட்டி, தமிழ்நாட்டின் எதிர்ப்பை ஒருமித்த குரலாகப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், தென்மேற்கு பருவமழை பொய்த்துள்ள இந்தச் சூழலில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி பற்றாக்குறை கால பகிர்வு திட்டத்தின் கீழ் நமக்கான தண்ணீரை கர்நாடக அணைகளில் இருந்து பெற தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். சில கட்சிகள் கூறுவது போல, இதனை இரு மாநில முதலமைச்சர்கள் பேசி தீர்க்க முடியாது என்றும், எதிர்க்கட்சித் தலைவர் கோருவது போல புதிய நடுவர் மன்றம் அமைப்பது தமிழ்நாட்டிற்கு பாதிப்பையே ஏற்படுத்தும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார். இந்தச் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் துரைராஜ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தமிழ்நாடு பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் மீது, அக்கட்சியின் பெண் நிர்வாகி ஒருவர் பாலியல் துன்புறுத்தல், ஏமாற்றுதல் மற்றும்…
மதுரையைச் சேர்ந்த தமிழக அமைச்சர்களான CTR நிர்மல் குமார், விஸ்வநாதன் இடையே உள்கட்சி பூசல் மற்றும் பனிப்போர் நிலவி வருவதாக…
\ தமிழ்நாட்டு அரசியலில் தற்போதைய கூட்டணி மாற்றங்களும், தலைவர்களின் பரஸ்பர விமர்சனங்களும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. இது குறித்து பிரபல…
தமிழக அரசியலில் நீண்டகாலமாக திமுக கூட்டணியில் நீடித்துவந்த மதிமுக, தற்போது தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய்க்கு ஆதரவு…
தெலுங்கானா மாநிலம் கோருட்லாவைச் சேர்ந்த பிரபல யூடியூபர் வைஷ்ணவி, ஹரி பாபு என்பவரைக் காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து…
அரசியல் விமர்சகரும் மூத்த எழுத்தாளருமான ராஜகம்பீரன், 'News focus tamil' யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின்…