CINEMA
‘என் பாட்டிலே மாற்றம் செய்ய நீ யார்?’ …கண்ணதாசனால் கோபமான புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்!
தமிழ் சினிமாவில் பாடல்களின் பொற்காலமாக விளங்கியது 50 களும் 60 களும்தான். அப்போது புகழின் உச்சத்தில் இருந்தவர்கள் உடுமலை நாராயணகவி, மருதகாசி, கண்ணதாசன் போன்றவர்கள். இவர்கள் அனைவரும் படங்களுக்கு பாடல்கள் மட்டும் எழுதாமல் கதை வசனமும் எழுதியுள்ளார்.
இந்நிலையில் தமிழ் இலக்கியத்தில் உச்சத்தைத் தொட்ட பாரதிதாசன், இவர்கள் அளவுக்கு சினிமாவில் ஜொலிக்க முடியவில்லை. இத்தனைக்கும் பாரதிதாசன் தன்னுடைய முதல் படத்துக்கு கதை வசனம் எழுதிக்கொடுத்து பாடல்களை எழுதுவதற்கு 40000 ரூபாய் சம்பளம் கொடுக்க தயாரிப்பு நிறுவனம் முன்வந்துள்ளது.
அந்த படத்தில் பாரதிதாசன் எழுதிக்கொடுத்த ஒரு பாடலில் ‘கமழ்ந்தது’ என எழுதியுள்ளார். அப்போதுள்ள ஒலிக்கருவிகளில் இந்த வார்த்தையை பதிவு செய்தால் சிறப்பாகக் கேட்காது என்பதால் அந்த வார்த்தையை மாற்றவேண்டும் எனக் கூறியுள்ளனர். அப்போது பாரதிதாசன் அங்கு இல்லை. அப்போது அங்கு உதவியாளராக பணியாற்றிக் கொண்டிருந்த கண்ணதாசன் ‘கமழ்ந்தது’ என்பதற்கு பதிலாக ‘மலர்ந்தது’ என மாற்றிக்கொடுத்துள்ளார்.
இதையறிந்த பாரதிதாசன் ‘எப்படி என் அனுமதி இல்லாமல் என் பாடல் வரிகளை மாற்றலாம்’ எனக் கேட்டு கொந்தளித்து விட்டாராம். மேலும் அந்த படத்தில் தொடர்ந்து பணியாற்றாமல் சம்பளத்தையும் வாங்கிக் கொள்ளாமல் வெளியேறிவிட்டாராம்.
சினிமாவின் நெளிவு சுளிவுகளுக்கு வளைந்து கொடுக்காத பாரதிதாசன் அதன் பின்னர் சினிமாவில் பெரிதாக வரமுடியவில்லை. தன்னுடைய படைப்பான பாண்டியன் பரிசை படமாக்க முயன்ற போதும் அது நடக்காமல் போய்விட்டது.
ஆனால் சினிமாவின் நுணுக்கங்களையும் எதிர்பார்ப்புகளையும் கச்சிதமாக பிடித்துக்கொண்ட கண்ணதாசன் அதன் பின்னர் 25 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் கோலோச்சினார் என்பது குறிப்பிடத்தக்கது. தான் பெரிய பாடல் ஆசிரியர் ஆனபோதும் தன் வரிகளில் மாற்றம் தேவைப்பட்டால் அதை அவரே செய்துகொடுத்துவிடுவாராம். அல்லது படக்குழுவினர் மாற்றிக்கொண்டாலும் அது பற்றி அவர் கோபப்படமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.