CINEMA
வாய்ப்பு இல்லாததால் தற்கொலை முயற்சி… நீதிமன்றத்தில் சந்திரபாபு அடித்த கமெண்ட்.. கண்ட்ரோல் பண்ண முடியாமல் சிரித்த நீதிபதி!
தமிழ் சினிமாவில் கோலோச்சிய நகைச்சுவை நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சந்திரபாபு. மற்ற நகைச்சுவை நடிகர்களை விட சந்திரபாபுவின் தனித்திறன் என்பது அவர் ஒரு பன்முகத்திறன் கொண்ட கலைஞர் என்பதுதான். சந்திரபாபு வெறும் நடிகராக மட்டும் இல்லாமல் பாடல்கள் பாடுவது, நடனமாடுவது, படத்தை இயக்குவது என பல துறைகளிலும் ஜொலித்தவர்.
வெற்றிகரமான நடிகராக வலம் வந்த சந்திரபாபு, தன்னுடைய 50 வயதுக்குள்ளாகவே அகால மரணமடைந்தார். அதற்கு அவரின் மோசமான குடிப்பழக்கமே காரணம் என்று சொல்லப்படுகிறது. சந்திரபாபு நகைச்சுவை நடிகராக மக்களை சிரிக்க வைத்தாலும், அவர் வாழ்வில் அவர் சந்தித்தது பெரும்பாலும் சோகங்களே. அவர் திருமணம் செய்த பெண், வேறு ஒருவரை காதலிப்பதாக சொன்னதால் அவரை பிரிந்தவர் சந்திரபாபு.
இந்நிலையில் சந்திரபாபு தன்னுடைய ஆரம்பகால வாழ்க்கையில் சினிமா வாய்ப்புக்காக பெரும் போராட்டங்களை சந்தித்துள்ளார். மனவிரக்தியில் இருந்த அவர் விஷத்தைக் குடித்துவிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உயிர் பிழைத்தார்.
ஆனாலும் தற்கொலை முயற்சி செய்துகொண்டதால் அவர் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். அப்போது அவரிடம் நீதிபதி “உன் மனதில் ஏதோ குறை என்று சொல்கிறாயே.. என்ன என்று சொல்லேன்” எனக் கேட்டுள்ளார்.
அதற்கு தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து தீக்குச்சியை எடுத்து உரசி பற்றவைத்து கையில் வைத்து சுட்டுக்கொண்டுள்ளார். மேலும் நீதிபதியிடம் “” இதே மாதிரி தான்.. நெருப்பு சுடும் என்று தான் சொல்ல முடியுமே தவிர, சூடு எப்படி இருக்கும் என்று அதை உணர்த்தமுடியாது. அதை அவரவர்கள் தான் உணர முடியும்” எனக் கூறியுள்ளார். சந்திரபாபுவின் இந்த பதிலைக் கேட்டு நீதிபதியே வாய்விட்டு சிரித்துள்ளார்.
பின்னர் நீதிபதி “முதல் முறை என்பதால் உன்னை மன்னித்து விடுதலை செய்கிறேன். மறுபடியும் நீ வந்தால் கண்டிப்பாகக் கடுமையாகத் தண்டிப்பேன்” என எச்சரித்துள்ளார். அதற்கு சந்திரபாபு “அடுத்த தடவை நிச்சயமாக உங்களிடம் வர மாட்டேன். இரண்டாவது முயற்சி நடந்தால் அது வெற்றிகரமாக முடியும்” என நக்கலாக பதிலளித்து விட்டு வெளியேறியுள்ளார்.