CINEMA
டி. ராஜேந்தர்கிட்ட நான் கத்துக்கிட்ட அந்த விஷயம், மேடையில் டிஆர் முன்னிலையில் வெளிப்படையாக சொன்ன இசைப்புயல் ஏஆர் ரகுமான்
தமிழ் சினிமாவில் இளையராஜா, எம்எஸ் விஸ்வநாதன், கேவி மகாதேவன், டி ராஜேந்தர் போன்றவர்கள் இசை சக்ரவர்த்திகளாக தங்களது இசை திறமையை, அவர்கள் பணிபுரிந்த படங்களில் வெளிப்படுத்தியவர்கள். இப்போதும் அவர்கள் இசைத்த பாடல்களை கேட்டால், காதுகளுக்கு மட்டுமல்ல, மனதையும் மிதமாக்கும். மனக்கவலைகளை மறக்க செய்யும். குறிப்பிட்ட சில பாடல்களை கேட்டால் மனம் மிக லேசாகும். அப்படிப்பட்ட சாகாவரம் பெற்ற பாடல்களை அவர்கள் தமிழ் சினிமாவுக்கு தந்திருக்கின்றனர்.
இந்த இசை ஜாம்பவான்கள் இளையராஜா, எம்எஸ்வி, கேவி மகாதேவன், டி ராஜேந்தர் ஆகியோரிடம் பணிசெய்தவர் இசைப்புயல் ஏஆர் ரகுமான் என்றால் அது மிகுந்த ஆச்சரியம் தருகிற ஒரு விஷயமாகதான் இருக்கிறது. மிக இளம் வயதில், பதின் பருவ காலத்தில் கீ போர்டு பிளேயராக இவர்களிடம் பணிசெய்திருக்கிறார் ஏஆர் ரகுமான். ஆனால் அப்போது அவரது பெயர் திலீப் என்பது பலருக்கும் தெரியாது. அன்று சிறுவனாக அந்த இசைஞானி, மெல்லிசை மன்னர்களிடம் இசை கற்றவர்தான் இன்று இசைப்புயலாக ஏ ஆர் ரகுமானாக ரசிகர்கள் முன் வெற்றி பெற்று ஆஸ்கர் நாயகனாக சிகரம் தொட்டு இருக்கிறார்.
இதுகுறித்து சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஏஆர் ரகுமான் மேடையேறி பேசுகையில், டி ராஜேந்தர் சார் என்னை இன்ஸ்பிரேசன் செய்த மனிதர்களில் மிக முக்கியமானவர். இளையராஜா, எம்எஸ்வி, கேவி மகாதேவன், நான் இவர்களிடம் வேலை செய்திருக்கிறேன். ஆனால் இவர்கிட்ட நான் இருந்தப்போ, நிறைய விஷயங்களை கத்துக்கிட்டேன். இவர் ஒர்க் பண்ணின ஸ்டைலை பார்த்து எனக்குள்ள இருந்த கூச்சம், வெட்கப்படுகிற தன்மை எல்லாம் போய், வெளிப்படையாக என்னை இருக்க வைத்தது. மற்றவர்களிடம் சகஜமாக பேச வைத்தது அவரோட இன்ஸ்பிரேசன்தான் என்று வெளிப்படையாக கூறினார் ஏஆர் ரகுமான். அந்த விழாவில் டி. ராஜேந்தர், சிலம்பரசன் போன்றவர்களும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.