CINEMA
‘ரஜினிகாந்த் சங்கி கிடையாது’… அப்டி சொன்னாலே எனக்கு ரொம்ப… ‘லால் சலாம்’ மேடையில் ஆவேசப்பட்டு பேசிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தமிழ்சினிமாவில் உச்சபட்சமான நடிகர். இந்தியாவின் சினிமா துறையில் ஒரு அடையாளமான நடிகர் என அவரைக் கூறலாம். அதேப் போல ஒரு உச்சபட்ச நடிகராக இருந்து, அரசியலில் வர நினைத்து பிறகு பின்வாங்கிய நடிகர்களில் ரஜினிகாந்தும் ஒருவர். அப்படி அவர் அரசியலில் வரப் போவதாக அறிவித்தது முதல், பல இடங்களில் அவர் பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்தது வெளிப்படையாக தெரிந்தது. பிரதமர் மோடியுடன் அவர் கொண்ட இணக்கம், ஆன்மீகம் தொடர்பான கருத்துகள் என அவர் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்கிறாரோ என்ற பார்வையை அவர் மீது ஏற்படுத்தியது.
அரசியலில் இருந்து பின்வாங்கிய பிறகும் கூட, ஒருவேளை தனது ஆதரவு பாஜகவிற்கு தான் என அவர் கூறிவிடுவாரோ என்றெல்லாம் பேசப்பட்ட நிலையில், அவ்வாறு அவர் செய்யவில்லை. சமீபத்தில் அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவில் அழைப்பிதழின் பேரில் ரஜினிகாந்தும், தனுஷூம் சென்றிருந்தனர். அங்கிருந்த அவர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. இதனை பார்த்த பாஜக எதிர்ப்பாளர்கள் பலர் அவரும் ஒரு சங்கி என இணையத்தில் கருத்துகளை பதிவிட்டு வந்தனர்.
இந்த நிலையில் தான், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள லாம் சலாம் திரைப்படத்தில் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா, மேடையில் பேசும் போது சமூக வலைதளத்தில் இருந்து எப்போதுமே விலகியே இருக்கிறேன். ஆனாலும், என்னுடைய டீம் அடிக்கடி ஒரு விஷயத்தை காட்டிக் கொண்டே இருந்தனர். அதிலும் குறிப்பாக சங்கி என முத்திரை குத்தப்படும் அந்த வார்த்தை எனது மனதை ரொம்பவே உறுத்துகிறது.
உங்களுக்கு எல்லாம் தெளிவா புரியும்படி ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சங்கி இல்லை. எங்கப்பா சங்கியா இருந்திருந்தா லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதித்திருக்கவே மாட்டார். மதங்களை கடந்து மனிதர்களை மட்டுமே நேசக்கூடிய மனிதர் அவர் என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உருக்கமாக பேசியுள்ளார்.