நடிகர் ராகவா லாரன்ஸ், தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். தமிழ் சினிமாவில் பேய் படங்கள் என்றாலே, அதற்கு ராகவா லாரன்ஸ்சும், சுந்தர் சி யும்தான் காரணம் என்பதுபோல, இருவரும் அடிக்கடி பேய் கதை படங்களை ரசிகர்களுக்கு தந்து வருகின்றனர். இப்போது, ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம், திரைக்கு வர இருக்கிறது. மேலும், லோகேஷ் கனகராஜ் இயக்கும் ரஜினி 171 படத்தில், வில்லனாக ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
சமீபத்தில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் குறித்த நேர்காணலில் ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா ஆகியோர் பங்கேற்றனர். அப்போது ராகவா லாரன்ஸ் கூறியதாவது, சந்திரமுகி 2 ஆடியோ ரிலீஸ் அப்பவே நான், சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்கு என்பது பற்றி சொன்னேன். விஜய் இதுபோன்ற பட்டங்களுக்கு ஆசைப்படுகிறவர் கிடையாது. எதுவாக இருந்தாலும், நீ யார் என்பதை ப்ரூப் பண்ணுன்னு சொல்ற கேரக்டர் அவர். அதனால் இந்த பிரச்னைக்கு அவரே முற்றுப்புள்ளி வைத்தது சந்தோஷம்.
சூப்பர் ஸ்டார் யாருங்கிற பஞ்சாயத்துல, இடையில சிலபேர் இதை வேற மாதிரி கொண்டு போயிட்டாங்க. இது பெரிய பிரச்னையாக மாறப் போகிற சூழ்நிலையில், லியோ படம் வெற்றி விழாவில் சூப்பர் ஸ்டாருன்னா அவரு ஒருத்தர்தான், என்று விஜய் அப்படி பேசியது மிகவும் சரி. எப்போதுமே ரஜினி மீது விஜய்க்கு அன்பு, அக்கறை உண்டு. என்னை பார்க்கும் போது, தலைவர் எப்படி இருக்கிறார், நல்லா இருக்கிறாரா, உடல் நலம் நன்றாக உள்ளதா என்றெல்லாம் விஜய் அக்கறையாக விசாரிப்பார் என்று கூறி இருக்கிறார் ராகவா லாரன்ஸ்