CINEMA
துணை மாப்பிள்ளையாக சென்று மண மாப்பிள்ளையாக மாறிட்டேன் ; நடிகர் காதல் சரவணனின் காதல் கதை
காதல், சிங்கம், சிறுத்தை உள்ளிட்ட படங்களில் காமெடி நடிகராக தலைகாட்டி சென்றவர் தான் சரவணன். இவரை காதல் சரவணன் என்றால் தான் சினிமா வட்டாரத்தில் தெரியும், காதல் படத்தில் கதை சொல்லும் இயக்குனர் போல் இவரின் காமெடி அமைந்திருக்கும் அதன் மூலமே மக்கள் மத்தியில் இவர் முகம் தெரிய ஆரம்பித்தது. அதனால் காதல் சரவணன் என்று அழைக்கப்படுகிறார்.
காதல் சரவணனின் காதல் கதையை படமாகவே எடுக்கலாம் போல, அப்படி ஒரு தெய்வீகமான காதல் கதை. இதோ அவரே அவர் காதல் கதை குறித்து பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, நான் என் நண்பனோடு அவனுக்கு பெண் பார்க்க சென்றிருந்தேன், அப்போது தெரியாது அவர் தான் என் மனைவி ஆக போகிறார் என்று. என் மனைவியின் பெயர் மலர், அவருக்கு ஒரு கால் ஊனம். அதனால் என் நன்பன் வேண்டாம் என்று சொல்லிவிட்டான். ஒரு ஆறு மாதம் கழித்து மலரிடம் இருந்து எனக்கு போன் வந்தது, கால் ஊனம் என்பதால் தான் இப்படி ஆகிவிட்டது என மலர் வருத்தப்பட்டார்.
எனக்கு மலரை பிடித்திருந்தது அதனால் திருமணம் செய்து கொள்ளலாமா என கேட்டேன். அவரும் சம்மதம் தெரிவித்தார். ஆனால் உங்கள் வீட்டில் வந்து என்னால் பேச முடியாது, நான் சினிமாவில் இருப்பதால் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என கூறினேன். மலர் டீச்சர் ட்ரைனிங் முடித்தவர், எனக்காக அங்கிருந்து சென்னை வந்தார். நாங்கள் திருமணம் செய்து கொண்டோம் என கேசுவலாக தன் காதல் கதையை கூற மலரின் முகமெல்லாம் சிவந்து விட்டது.
இதுகுறித்து மலர் கூறும்போது, பலர் என்னை வெறுத்தார்கள் என்னை திருமணம் செய்து இவர் மட்டுமே விருப்பப்பட்டார். நான் இவரை நம்பி வந்தேன், இவர் எனக்கு கடவுள் கொடுத்த பரிசு. என் வாழ்க்கை நன்றாக இருக்கிறது என்றால் இவரால் தான். என் விருப்பப்படியே கல்யாணத்தை நடத்தினார். எனக்கு கால் ஊனம் என்பதால் நான் எங்கும் செல்லமாட்டேன், என்னை எங்கு சென்றாலும் அழைத்து செல்வார், நான் வரவில்லை என்றால் அவரும் எங்கும் செல்ல மாட்டார். எனக்கு இரண்டு மகன்கள் உள்ளனர், சந்தோசமாக இருக்கிறேன் என்கிறார் கண்ணீர் மல்க.
காதல் சரவணனின் காதல் கதை இவ்வளவு அழகானதாக உள்ளது, அவர் மனைவிக்கு சந்தோஷத்தையும் அன்பையும் வாரி வழங்கி வருகிறார் சரவணன். அவர்கள் எப்போதும் சந்தோசமாக வாழ நாமும் வாழ்த்துவோம்.