ஆருத்ரா பண மோசடி வழக்கில் துபாயில் தலைமறைவாக இருந்த நடிகரும் முன்னாள் பாஜக நிர்வாகியுமான ஆர்.கே சுரேஷ் கடந்த டிசம்பர் 10ஆம் தேதி இந்தியா திரும்பினார். அவர் மீது லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். நீதிமன்ற உத்தரவுபடி அவர் விசாரணைக்கு வந்த நிலையில் விடுவிக்கப்பட்டார். ஆருத்ரா கோல்ட் நிறுவனம் முதலீடுகளுக்கு 30 சதவீதம் வட்டி தருவதாக கூறி 2438 கோடியை மோசடி செய்ததாக குற்றச்சாட்டை இருந்த நிலையில் இது தொடர்பாக 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகார்கள் அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பாஜக ஓபிசி பிரிவு துணைத் தலைவராக உள்ள ஆர் கே சுரேஷ் உள்ளிட்ட 21 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வெளிநாட்டில் உள்ளதால் தன்னால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது என்று ஆர் கே சுரேஷ் உச்ச நீதிமன்றத்தை தனது வழக்கறிஞர் மூலமாக நாடினார். இதனை தொடர்ந்து ஆர் கே சுரேஷின் வங்கி கணக்கை முடக்கி பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். இதற்கு எதிராக ஆர்கே சுரேஷ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் இந்தியா திரும்பிய ஆர் கே சுரேஷ் சென்னை எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணைக்கு நேற்று முன்தினம் ஆஜரானார். இதனைத் தொடர்ந்து அவரிடம் 7 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்திய போலீசார் நேற்று மீண்டும் ஆஜராக உத்தரவிட்டனர். இதனைத் தொடர்ந்து ஒயிட் ரோஸ் என்ற திரைப்படத்திற்காக ஆருத்ரா நிறுவனத்தில் ஏஜென்ட் ஆக இருந்த ரூசோவிடம் இருந்து 15 கோடி ரூபாய் பணம் பெற்றதை ஆர் கே சுரேஷ் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று நடைபெறும் விசாரணையில் மேலும் சில தகவல்களும் இதற்கு பின்னால் உள்ளவர்கள் யார் என்பது குறித்தும் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.ணைக்கு