CINEMA
வீட்டில் வாடகைக்கு குடியிருந்தவரிடம் ரூ. 25 லட்சம் ரூபாயை ஏமாற்றினாரா பிரபுதேவா சகோதரர் – உண்மையில் நடந்ததுதான் என்ன?
நடிகர், நடன இயக்குநர், இயக்குநராக இருப்பவர் பிரபுதேவா. இவரது தம்பி நாகேந்திர பிரசாத். இவரும் கில்லி, 123, தொட்டாச்சிணுங்கி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். பல படங்களில் நடன காட்சிகளில் மட்டுமே ஆடி இருக்கிறார். இவருக்கு சொந்தமான அபார்ட்மென்ட் வீடு, தேனாம்பேட்டையில் உள்ளது. இவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்த விக்னேஷ் என்பவர், நாகேந்திர பிரசாத் தன்னிடம் ரூ. 25 லட்சத்தை திருப்பி தராமல் ஏமாற்றிவிட்டதாகவும், வீட்டை பூட்டி சீல் வைத்து விட்டதாகவும் புகார் கூறும் வீடியோதான் இப்போது வைரலாகி வருகிறது. இது தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து விக்னேஷ் கூறியிருப்பதாவது, கொரோனா காலகட்டத்துக்கு பிறகு, தேனாம்பேட்டையில் வாடகைக்கு வீடு தேடிய போது, இந்த வீட்டின் முன் டூலெட் போர்டு இருந்தது. அந்த போர்டில் இருந்த நெம்பருக்கு பேசிய போது, வீட்டைக்கு வாடகைக்கு விட ரூ. 25 லட்சத்தை, வீடுகளை நிர்வகிக்கும் கம்பெனியிடம் தரவும் வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.
கம்பெனி எதற்கு என்று கேட்ட போது, அவர்களது பராமரிப்பில் விட்டால்தான், கூடுதல் லாபம் கிடைக்கும். ஆனால், வீட்டை காலி செய்யும் போது, நீங்கள் கொடுத்த ரூ. 25 லட்சம் திருப்பிக் கொடுக்கப்படும் என்று அவர் கூறியதை நம்பி, ரூ. 25 லட்சம் அந்த கம்பெனியிடம் ஒப்படைத்தேன். அதற்கான ஆவணங்கள், ஆதாரங்கள் உள்ளது. அந்த கம்பெனி பெங்களூருவில் உள்ளது என்றனர். மற்றபடி அந்த கம்பெனி குறித்த எந்த விவரமும் எனக்கு தெரியாது.
இந்நிலையில், எட்டு மாதங்கள் மட்டுமே அந்த கம்பெனி, உங்கள் வீட்டுக்கு வாடகை கொடுத்துள்ளது. அந்த கம்பெனி எஸ்கேப் ஆகிவிட்டது. அதனால், வீட்டை உடனடியாக காலி செய்யுங்கள் என, வீட்டு உரிமையாளர் நாகேந்திர பிரசாத் போனில் மிரட்டுகிறார். ஆனால், 2 ஆண்டுகள் நான் இந்த வீட்டில் இருக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. நான் தந்த செக்யூரிட்டி ரூ 25 லட்சத்தை, கம்பெனியிடம் கேட்டுக் கொள்ளுங்கள் என்கின்றனர்.
இப்போது, போலீஸ் உதவியுடன் வீட்டை பூட்டி விட்டனர். வீட்டுக்குள் நாங்கள் வளர்க்கும் நாய் உள்ளது. இந்த வீட்டின் உரிமையாளர் நடிகர் பிரபுதேவா தம்பி நாகேந்திர பிரசாத் என்பதே எனக்கு இப்போதுதான் தெரிய வருகிறது. கம்பெனிகாரங்க ஓடி விட்டதாக, என் பணம் ரூ. 25 லட்சத்தை திருப்பித் தராமல் ஏமாற்ற பார்க்கின்றனர், என்று கூறி இருக்கிறார் விக்னேஷ். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.