CINEMA
குஷ்பு-வயும் என்னையும் தொடர்புபடுத்தி.. என் பொண்ணு என்கிட்ட வந்து அழுவுறா.. மேடையில் மனமுடைந்த் பேசிய தனுஷின் அப்பா..
எட்டுப்பட்டி ராசா, என் ராசாவின் மனசிலே, வீரத்தாலாட்டு, சோலையம்மா, என் ஆச ராசாவே, கரிசக்காட்டு பூவே, வீரம் வௌஞ்ச மண்ணு உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் நடிகர் கஸ்தூரிராஜா. இவரது மகன்கள்தான் இயக்குநர் செல்வராகவன், நடிகர் தனுஷ்.
சமீபத்தில் கஸ்தூரிராஜாவையும், குஷ்பூவையும் தொடர்புபடுத்தி சில தகவல்கள் மீடியா சிலவற்றில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பிரஸ்மீட் ஒன்றில் இயக்குநர் கஸ்தூரிராஜா பேசியதாவது, தமிழகத்தை பேனா தான் பல ஆண்டுகள் ஆட்சி செய்தது. அதன்மூலமே இந்த பேனா என்கிற எழுதுகோலின் மகத்துவம், பெருமை அதில் புரிந்திருக்கும். அதில் மையை ஊற்றி எழுதுவதை விட உண்மையை எழுதுவதுதான் மிக முக்கியம்.
நான் இங்கு ஒரு இயக்குநராக வரவில்லை. ஒரு எழுத்தாளனாகத்தான் வந்திருக்கிறேன். நாட்டில் எவ்வளவோ பிரச்னைகள் இருக்கின்றன. மக்களின் பிரச்னைகளை சொல்ல வேண்டிய கடமை, ஊடகங்களுக்கு இருக்கின்றன. அந்த பிரச்னைகளை எழுதி நாட்டில் பல மாற்றங்களை கொண்டு வர முடியும். பல பிரச்னைகளை தீர்க்க முடியும். ஆனால் தனிமனித விஷயங்களை, அவர்களது அந்தரங்கம் சார்ந்து விஷயங்களை எழுதி யாருடைய மனதையும் காயப்படுத்தக் கூடாது. ஏனெனில் ஒவ்வொருவருக்கும் தனிமனித வாழ்க்கை, குடும்பம், அந்தரங்கம் உள்ளது. அது இதுபோன்ற பொய்யான வதந்திகளால் கடுமையாக பாதிக்கப்படும்.
பள்ளிக்கு சென்ற என் மகள், என்னிடம் வந்து குஷ்பூ சித்தி சவுக்கியமான்னு கேக்கறாங்க என்று அழுகிறாள். இதற்கு காரணம் மீடியா. குஷ்பூ எனக்கு சகோதரி மாதிரி. இதுவரை நான் இயக்கிய 9 படங்களில் குஷ்பூ நடித்திருக்கிறார். நான் அவங்களுக்கு படம் பண்ண வேண்டும் என்றால், போன் செய்வேன். எத்தனை நாள் கால்ஷீட் என்றுதான் கேட்பார்.
ஏம்மா என்ன கேரக்டர், என்ன கதை என்றெல்லாம் கேட்க மாட்டியா, என்று கேட்டால், அதற்கு ஏழெட்டு படம் பண்ணிட்டோம். நான் படத்துக்கு தேவை என்பதால்தானே கூப்பிடறீங்க, என்பார். அதுதான் எனக்கும் குஷ்பூவுக்கும் உள்ள உறவு. அந்த பேனாவில் மை இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் எழுதி விடக்கூடாது என்று பேசியிருக்கிறார் இயக்குநர் கஸ்தூரிராஜா.