பெங்களூரில் உள்ள மிக முக்கிய அரசு கட்டிடமான ‘விதான சௌதா’வின் முன்புறம் உள்ள நடைபாதையில், கடந்த ஜூன் 28 ஞாயிற்றுக்கிழமை மாலை இருதரப்பு நேபாள இளைஞர்களுக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. அப்பகுதியில் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் நடமாடும் நேரத்தில் இந்த வன்முறைச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
புகைப்படம் எடுப்பது தொடர்பான ஒரு சாதாரண வாக்குவாதம் தான் இந்த மோதலுக்குக் காரணமாக அமைந்துள்ளது. ஒரு குரூப் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த போது மற்றொரு குரூப் அதற்கு இடையூறாக இருந்ததாகக் கூறி இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் விரைவில் கைகலப்பாக மாறி, ஹெல்மெட் மற்றும் கைகளாலேயே ஒருவரையொருவர் நடுரோட்டில் பயங்கரமாகத் தாக்கிக் கொண்டனர். இதனை அங்கிருந்த நபர் ஒருவர் தனது மொபைல் போனில் வீடியோ எடுக்க, அது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில், விதான சௌதா காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, சக்தி, ஈஸ்வர், திபேந்திரா உட்பட 4 நேபாள வாலிபர்களைக் கைது செய்துள்ளனர். இவர்கள் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பாதுகாப்புப் காவலர்களாகப் பணிபுரிந்து வருவது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த மோதலில் தொடர்புடைய மற்ற நபர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
