இனிமேல் திரைமறைவு ஆட்டம் இல்லை… நேராக கேமரா முன் வந்த ஜான் ஆரோக்கியசாமி… விசுவாசத்திற்கு இலக்கணம் வகுக்கும் முதலமைச்சர் விஜய்…!

By SATHISH R on ஆடி 1, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மேற்கொண்டு வரும் அடுத்தடுத்த அதிரடி நியமனங்கள், தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போதைய ஹாட் டாபிக் ஆக மாறியுள்ளன. நீண்ட காலமாகத் தன்னுடன் பயணித்தவர்கள் மற்றும் இக்கட்டான சூழல்களிலும் விசுவாசமாக இருந்தவர்களுக்கு முக்கிய அரசுப் பொறுப்புகளை வழங்கி அழகு பார்ப்பதில் விஜய் தனி முத்திரை பதித்து வருகிறார். அந்த வகையில், இதுவரை திரைமறைவில் இருந்து தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்த ஜான் ஆரோக்கியசாமியின் திடீர் பொதுவெளி வருகை, தவெகவின் அடுத்தகட்ட மெகா பிளானை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற ஐயூஎம்எல் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுடனான சந்திப்பு நிகழ்ச்சிகளில், தவெக அமைச்சர்களான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோருடன் ஜான் ஆரோக்கியசாமியும் முன்னிலையில் நின்றது பலரது புருவங்களை உயர்த்தியுள்ளது. வழக்கமாக எளிய உடையிலும் முகக்கவசத்துடனும் ஊடக வெளிச்சத்தைத் தவிர்த்து வந்த அவர், தற்போது ஒரு முழுநேர அரசியல்வாதியைப் போல வெள்ளைச் சட்டையுடன் வலம் வரத் தொடங்கியுள்ளார். முதலமைச்சரின் சிறப்பு ஆலோசகராக இருக்கும் இவரின் இந்த திடீர் மாற்றம், கட்சிக்குள் அவருக்கு மிக முக்கியப் பொறுப்பு வழங்கப்படுவதற்கான ஒரு முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது.

   

மறுபுறம், தனக்கு நம்பிக்கையானவர்களை முக்கியப் பொறுப்புகளில் அமர்த்தும் விஜய்யின் பாணி தவெகவினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. விஜய்யின் கார் ஓட்டுநராக இருந்த ராஜேந்திரனின் மகன் சபரிநாதனுக்கு விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்து, தற்போது அவரை ஆளுங்கட்சி கொறடாவாக விஜய் உயர்த்தியுள்ளார். அதேபோல், மேலாளராக இருந்த ஜெகதீஷ் பழனிசாமி முதலமைச்சரின் தனிச் செயலாளராகவும், தயாரிப்பாளர் வெங்கட நாராயணா டெல்லியில் தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த வரிசையில்தான், வியூக வகுப்பாளரான ஜான் ஆரோக்கியசாமியை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் முயற்சியில் விஜய் இறங்கியுள்ளார்.

   

இதற்கிடையே, விரைவில் நடைபெறவுள்ள திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் ஜான் ஆரோக்கியசாமியை தவெக வேட்பாளராகக் களமிறக்க உயர்மட்டக் குழுவில் தீவிர ஆலோசனை நடந்து வருவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. 2026 சட்டமன்றத் தேர்தலில் பெற்ற மாபெரும் வெற்றியை, வரவிருக்கும் இடைத்தேர்தல்களிலும் தக்கவைக்க வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக இருக்கிறார். தேர்தல் களத்தை நன்கு அறிந்த ஒரு வியூக நிபுணரே நேரடியாக வேட்பாளராகக் களம் கண்டால், அது திருச்சி கிழக்கு தொகுதியில் எளிதான வெற்றியைத் தரும் என விஜய் நம்புவதாகக் கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் போது தவெகவின் அடுத்தகட்ட நகர்வு முழுமையாகத் தெரியவரும்.